வைகை கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து சேதம்: திருப்பரங்குன்றத்தில் தண்ணீரின்றி பொதுமக்கள் தவிப்பு
மதுரை- திருமங்கலம் சாலையில் உள்ள தென்கால் கண்மாயில் தடுப்புச்சுவர் கட்டும் பணியின்போது திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் வைகை கூ
மதுரை- திருமங்கலம் சாலையில் உள்ள தென்கால் கண்மாயில் தடுப்புச்சுவர் கட்டும் பணியின்போது திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் வைகை கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் அருகே புறவழிச் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் கட்டும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பணியின் போது அவ்வழியாக திருப்பரங்குன்றம் நகருக்குள் செல்லும் வைகை கூட்டுக்குடிநீர் குழாய் இருப்பதை கவனிக்காமல் அதிகாரிகள் அஜாக்கிரதையாக குழாய் மீது காங்கிரீட் தடுப்புச்சுவரை கட்டியுள்ளனர். இதனால் அதிக பாரம் காரணமாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது. இதனால் திருப்பரங்குன்றம் நகரில் கடந்த 5 நாள்களாக குடிநீர் வராமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து மதிமுக பகுதிச் செயலர் முருகேசன் கூறியது:
திருப்பரங்குன்றம் பகுதியில் ஏற்கெனவே பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி உபயோகித்து வருகின்ற னர். இந்நிலையில் தற்போது குழாய் உடைந்து 5 நாள்களாக தண்ணீர் வரவில்லை. அதிகாரிகள் அதனை சரி செய்யும் பணியிலும் ஈடுபடவில்லை. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறியது: புறவழிச் சாலையில் தடுப்புச்சுவர் கட்டிவரும் நெடுஞ்சாலைத் துறையினர் மாநகராட்சியில் எந்த தகவலும் கூறாமல் பூமிக்கடியில் செல்லும் வைகை கூட்டுக் குடிநீர் பைப் லைன்மீது மிகப்பெரிய காங்கிரிட் சுவரை எழுப்பியுள்ளனர். இதனால் பாரம் தாங்காமல் குழாய் உடைந்துவிட்டது.
எனவே புதிதாக கட்டப்பட்டுள்ள சுவற்றை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத் துறையினருக்கு கடிதம் வைத்துள்ளோம். அவர்கள் சுவற்றை அகற்றியவுடன் விரைவில் பணிகள் செய்யப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.