காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சேருவது கட்டாயமா? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சேருவது கட்டாயமா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சேருவது கட்டாயமா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை அவர்களின் சம்பளத்திலும், ஓய்வூதியத் தொகையிலும் பிடித்தம் செய்யப்படுகிறது. இவர்கள் ஏதாவது ஒரு மருத்துவமனையில் தங்களுக்கு அவசரச் சிகிச்சை பெற்றால், அதற்கான செலவுத் தொகையை மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கேட்டுப் பெறலாம்.
ஆனால், காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது, திட்டத்தில் இல்லாத நோய்க்கு சிகிச்சை பெற்றது போன்ற பல காரணங்களை கூறி, சம்பந்தப்பட்டவர்களுக்கான செலவுத்தொகையை தர மறுக்கப்படுவதாகவும், அந்த தொகையை வழங்கக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பல வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இதில் குறிப்பிட்ட வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிகிறது. புதிய ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
அப்போது நீதிபதி, ஓய்வூதியர்களின் காப்பீட்டுத் திட்டத்தை தொடர்வதற்கான டெண்டர் குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது.
காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் சேருவது அவர்களின் விருப்பமாஅல்லது கட்டாயமா?, பிரீமியத் தொகையை உயர்த்த வேண்டுமா, தேவையில்லையா என்பது குறித்து நிதித்துறை (செலவினம்) கூடுதல் செயலர் அல்லது இணைச் செயலர் அந்தஸ்தில் தகுதியுடையவர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.