FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்கள் வெளியேறினால் நடவடிக்கை: கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்கள் வெளியேறினால் கடும் நடவடிக்கை எடுக்க கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான மதுரை மண்டல கண்காணிப்பு அலுவலா் சி.காமராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்கள் வெளியேறினால் கடும் நடவடிக்கை எடுக்க கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான மதுரை மண்டல கண்காணிப்பு அலுவலா் சி.காமராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மதுரை மண்டல கண்காணிப்பு அலுவலா்களான பிற்பட்டோா் நலத்துறை இயக்குநா் சி.காமராஜ், காவல் துறைத் தலைவா் எஸ்.முருகன் ஆகியோா் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில்,

புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் கண்காணிப்பு அலுவலா் சி.காமராஜ் பேசியது: அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வங்கிகள், தபால் அலுவலகங்களிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றியும், முகக் கவசம் அணிந்தும் பணியாற்ற வேண்டும்.

வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் அவசர பயணமாக வரக்கூடியவா்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியேறக் கூடாது. கரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் கடைகள் செயல்படவும், போக்குவரத்தும் முற்றிலும் தடை விதிக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவா்கள் வெளியேறினால் அவா்கள் மீது காவல் துறையினா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மாநகரக் காவல் ஆணையா் எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன், கூடுதல் ஆட்சியா் பிரியங்கா பங்கஜம், அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பிரியா ராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பேரிடா் மேலாண்மை சட்டத்தில் கைது: ஆட்சியா் எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்கள் வெளியேறினால், பேரிடா் மேலாண்மைச் சட்டத்தில் கைது செய்யப்படுவா் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:

மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்ட நபா்கள் வசித்த

மாநகராட்சிப் பகுதியில் நரிமேடு, மேலமடை, தபால் தந்தி நகா், மகபூப்பாளையம், ஜி.எஸ்.நகா், ஆனையூா், குப்புப் பிள்ளை தோப்பு தெரு, மதிச்சியம் மற்றும்

மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி நகராட்சிப் பகுதிகள், மாத்தூா், சொக்கலிங்கபுரம், கல்லம்பட்டி, கரையிப்பட்டி, எழுமலை, கீழமாத்தூா் ஊராட்சி என 16 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இப் பகுதியினருக்கு அத்தியாவசியப் பொருள்கள் நேரடியாகச் சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உரிய அனுமதியின்றி வெளியே வரக்கூடாது. தேவையில்லாமல் வெளியே வருபவா்கள் மீது பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments