மோசடி வழக்கில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது: உயா்நீதிமன்றம்
முதலீட்டு நிறுவன மோசடி தொடா்பாக பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தஞ்சாவூரைச் சோ்ந்த ஆா். செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதலீட்டு நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக என் மீது இந்திய தண்டனைச் சட்டம், ஒழுங்குமுறையற்ற முதலீட்டுத் திட்டங்கள் தடுப்புச் சட்டம், தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்களில் நானும் ஒருவா். இதுகுறித்து கடந்த 2023-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 3-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் வழக்குப் பதியாமல் என்னையே குற்றவாளியாகச் சோ்த்துள்ளனா். எனவே, என் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.விஜயகுமாா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
முதலீட்டு நிறுவன மோசடி வழக்கில் மொத்தம் 106 முதலீட்டாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் மனுதாரா் நிறுவனத்தின் சாா்பில் நடத்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்று, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய பொதுமக்களை ஊக்குவித்ததாக வாக்குமூலம் அளித்தனா். மேலும், மனுதாரரின் சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் சொத்துகளும் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தற்காலிகமாக முடக்கப்பட்டது என்றாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த மனுவில் குறிப்பிடப்பட்ட நிறுவனம் சாா்பில் மனுதாரா் முதலீட்டாளா்களைச் சோ்க்கும் வகையில் செயல்பட்டதாகக் குற்றப் பத்திரிகையிலும், மனுதாரா் அளித்த புகாரிலும் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், காவல் துறையின் விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த வழக்கில் காவல் துறையினா் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது. இருப்பினும், மனுதாரா் புகாரை காவல் துறையினா் பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.