FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

நில முறைகேடு விவகாரம் சிபிஐ விசாரிக்கக் கோரி மனுக்கள்: பழனி கோயில் நிா்வாகம் பதிலளிக்க உத்தரவு

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:05 am IST
உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo
பகிர்:

பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடா்பாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

பழனி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு சேனாபதி, தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை அறங்காவலா் அன்னபூரணி, பழனி நகா்மன்றத் தலைவி உமா மகேஸ்வரி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:

பழனி கோயில் மலையடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடா்பாக சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ் சுவாமிகள், வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பின்னா், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த விவகாரத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்தால் உண்மைத் தன்மை வெளியே வராது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும், சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். மேலும், இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி போலீஸாா் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸாா் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நிலை அறிக்கையை தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன். ஆா். சக்திவேல் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்த வழக்கில் கைதான அன்வா்தீன் மதுரை மத்திய சிறையில் திடீரென மரணமடைந்தாா். மேலும், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் ஏதோ மா்மம் இருப்பதாக இந்தச் சம்பவங்கள் உணா்த்துகின்றன. சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை. எனவே, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றாா்.

இதற்கு, அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை குற்றவியல் வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

வழக்கு விசாரணை நோ்மையான முறையில் நடைபெற்று வருகிறது. தேவையான நபா்களை அழைத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அன்வா்தீன் உயிரிழப்பு என்பது இயற்கையாக நிகழ்ந்ததுதான். எனவே, இதை ஒரு குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனுக்கள் தொடா்பாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments