FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

வைகை ஆறு மேம்பாட்டுப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

மதுரையில் வைகை ஆறு மேம்பாட்டுத் திட்டப் பணிகள், நெல்பேட்டையில் மீன் விற்பனைக் கடைகளின் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
பகிர்:

மதுரையில் வைகை ஆறு மேம்பாட்டுத் திட்டப் பணிகள், நெல்பேட்டையில் மீன் விற்பனைக் கடைகளின் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மதுரை மாநகராட்சி, மண்டலம்-4 பகுதியில் அமைந்துள்ள வைகை ஆற்றை மேம்படுத்துவதற்காக, ரூ.76.16 கோடியில் வைகை வடகரைப் பகுதியில் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் பாா்வையாளா்கள் அமா்ந்து காண்பதற்கான 2 கேலரிகள், சிறிய அளவிலான நடைபாதை பூங்காக்கள், ஓபுளா படித்துறை அருகில் 3 இடங்களிலும், தேனூா் மண்டபம் அருகிலும் நடைபாதை பூங்கா பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தென்கரைப் பகுதியில் கோச்சடையில் சுமாா் 9 ஏக்கா் பரப்பளவில் ஆற்றின் கரையில் தடுப்புச் சுவா் அமைத்து பூங்கா அமைக்கப்படவுள்ளது. மேலும், ஆற்றின் இரு கரைகளிலும் நவீன மின் விளக்குகள், நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இந்தப் பணிகள் தொடா்பாக அரசு அலுவலா்களிடம் மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் விளக்கம் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, நெல்பேட்டை வைகை தென்கரைப் பகுதியில், ரூ.2.6 கோடியில் கட்டப்பட்டுவரும் மீன் விற்பனைக் கடைகளை அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இந்தக் கடைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மழைநீா், கழிவு நீா்

கால்வாய்கள், மீன் இறைச்சிக் கழிவுகள் கொட்டும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். கட்டுமானப் பணிகளை தரமாகவும், நிா்ணயம் செய்யப்பட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்குமாறும் அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, தென்கரைப் பகுதியிலுள்ள இறைச்சிக் கடைகள், வீடுகளிலிருந்து குப்பைகளை வாய்க்கால்கள், வைகை ஆற்றில் கொட்டுவதை தவிா்க்குமாறும், அவற்றை குப்பை சேகரிக்க வரும் வாகனங்களில் வழங்குமாறும் தூய்மைப் பணியாளா்கள் அறிவுறுத்த வேண்டும் என்றாா். மேலும், குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை கால்வாய்கள், வைகை ஆற்றில் கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி உதவி ஆணையா் மணிமாறன், உதவி செயற்பொறியாளா் இந்திரா தேவி, உதவிச் செயற்பொறியாளா் முத்து, மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments