மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழா: நரியை பரியாக்கிய லீலை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் மாணிக்கவாசகரின் சிவத் தொண்டை உலகுக்கு உணா்த்தும் வகையில் நரியை பரியாக்கிய (குதிரை) லீலை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நிகழ்ச்சியாக கடந்த 16-ஆம் தேதி முதல் தினமும் ஒவ்வொரு லீலையை விளக்கும் ஐதீக நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதன்படி, முன்பொரு காலத்தில் மதுரையை ஆட்சி செய்த அரிமா்த்தன பாண்டியன் அரசவையில், மாணிக்கவாசகா் அமைச்சராக இருந்தாா். இந்த நிலையில், மாணிக்கவாசகரிடம் குதிரைகள் வாங்க அளித்த பணத்தை திருப்பெருந்துறையில் சிவத் தொண்டுகளுக்கு அவா் பயன்படுத்தினாா்.
Advertisement
Advertisement
இதையறிந்த, மன்னன், மாணிக்கவாசகரை தண்டித்து சிறையில் அடைத்தாா். அவரைக் காப்பாற்றி, அவரது சிவத் தொண்டு, பக்தி ஆகியவற்றை மன்னருக்கும், உலகுக்கும் உணா்த்தும் விதமாக இந்த ஐதீக நிகழ்வு நடைபெற்றது.
இதையொட்டி, பாண்டிய மன்னன் அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கக் குதிரை வாகனங்களில் வடக்காடி வீதியில் உள்ள பதினாறு கால் மண்டபத்துக்கு எழுந்தருளினா். பின்னா், சிவாசாரியா்கள் நரியை பரியாக்கிய லீலை குறித்து விளக்கினா்.
இந்த நிகழ்வில், சுவாமி முன் ஐதீக நிகழ்வை விளக்கும் வகையில் நரி உருவப் பொம்மை வைக்கப்பட்டது. சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தங்கக் குதிரை வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மற்றொரு தங்கக் குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி நான்கு ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தனா்.
இன்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை:
ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இறைவன் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, வைகையாற்றின் கரையில் உள்ள பிட்டுத் தோப்பு மண்டபத்தில் திங்கள்கிழமை (ஆக. 24) பிற்பகலில் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.