FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தனியாா் நிறுவன தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தனியாா் நிறுவனத்துடனான தூய்மைப் பணி ஒப்பந்தத்தை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 10 ஜூலை 2026, 4:54 am IST
மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

தனியாா் நிறுவனத்துடனான தூய்மைப் பணி ஒப்பந்தத்தை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை ஏற்றுள்ள தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மாநகராட்சிப் பணிகளில் தனியாா்மயத்தை முழுமையாகக் கைவிட வேண்டும், மாநகராட்சியின் சொத்து வரி முறைகேடு, பொலிவுறு நகரம் திட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வை. ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். பாலசுப்பிரமணியம் தொடக்கவுரையாற்றினாா். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், மதுரை மாவட்டச் செயலா்கள் கே. ராஜேந்திரன் (புகா்) மா. கணேசன் (மாநகா்), மாமன்ற உறுப்பினா் விஜயா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

Advertisement

Advertisement

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் ஆா்ப்பாட்ட நிறைவுரையாற்றினாா். அப்போது, அவா் பேசியதாவது:

மதுரை மாநகராட்சியின் தூய்மைப் பணியை ஏற்றுள்ள தனியாா் நிறுவனம் குப்பைக்கு பதிலாக மண்ணை அகற்றி எடை கணக்குக்காட்டி மோசடி செய்தது. இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் ரூ. 75 லட்சம் அபராதம் விதித்தது. ஆனால், சித்திரைத் திருவிழா காலத்தில் இந்த அபராதத்தை ரத்து செய்தால் மட்டுமே தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும் என இந்த நிறுவனம் வேலை நிறுத்தத்தை அறிவித்து, நெருக்கடியை ஏற்படுத்தியது. இதேபோல, பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்துக்கு எதிராக உள்ளன. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கட்சியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். கட்சியின் வடக்கு (1) பகுதிக் குழுச் செயலா் வி. கோட்டைசாமி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments