பாம்பன் பாலத்தை ஆய்வு செய்ய வந்த போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தப்பி ஓட்டம்
பாம்பன் பாலத்தில் ரயில்வே லஞ்ச ஒழிப்பு அதிகாரி என கூறிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்ய வந்த போலி அதிகாரிகள் இருவர் தப்பி ஓடினர்.
பாம்பன் பாலத்தில் ரயில்வே லஞ்ச ஒழிப்பு அதிகாரி என கூறிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்ய வந்த போலி அதிகாரிகள் இருவர் தப்பி ஓடினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில்வே பாலத்தின் பராமரிப்பு மூத்த பொறியாளர் ராதாகிருஷ்ணனிடம் சனிக்கிழமை வந்த ஒருவர் பாம்பன் பாலத்தின் பராமரிப்புப் பணி குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள ரயில்வே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி விஜயகுமார் என்றும், பாம்பன் பாலத்தை ஆய்வு செய்ய, ட்ராலி ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வந்த விஜயகுமார் தன்னுடன் மேலும் ஒருவரையும் அழைத்து வந்துள்ளார் இரண்டு பேரையும் பாம்பன் பாலத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் இரண்டு பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து அவர்கள் போலி என தெரியவந்தது. இதற்குள் சுதாரித்துக் கொண்ட இரண்டு பேரும் அங்கிருந்து உடனடியாக தப்பி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே மூத்த பொறியாளர் ராதாகிருஷ்ணன் பாம்பன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பாம்பன் காவல்துறை ஆய்வாளர் மாயராஜலட்சுமி திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி எனக் கூறி கொண்டு ஆய்வு செய்ய வந்தது ஈரோடு சென்னிமலை பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரையும், அவருடன் வந்தவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.