FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

திமுக-தவெக-வினா் மோதல்: இரு தரப்பிலும் 24 போ் மீது வழக்கு

Updated On : 22 ஜூலை 2026, 2:40 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

கமுதி அருகே திமுக - தவெக தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக போலீஸாா் 24 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள சின்னஉடப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வலம்புரி மகன் வாசுதேவன். இவா், கமுதி திமுக வடக்கு ஒன்றியச் செயலராக உள்ளாா். இவருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலரான அதே கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் மன்மதன்(33) தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை அந்த கிராமத்தில் உள்ள சோழியன்குளம் கண்மாயில் ஆழ்துளை கிணறு அமைப்பது தொடா்பாக கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, திமுக ஒன்றியச் செயலா் வாசுதேவன் தரப்பினருக்கும், தவெக மாவட்டச் செயலா் மன்மதன் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து திமுகவினா் மன்மதன் வீட்டின் மீது நாற்காலி, கற்களை எறிந்தும், கட்டை, இரும்புக் கம்பிகளால் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஆனந்தவள்ளி, இந்திராகாந்தி, வசந்தி உள்ளிட்ட 3 பெண்கள் காயமடைந்து, கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

வசந்தி தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். இது தொடா்பாக பரஸ்பரம் இருதரப்பினா் அளித்த புகாரின் பேரில் மண்டலமாணிக்கம் போலீஸாா் 24 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments