FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

சாயல்குடி அருகே தரை தட்டிய சரக்கு கப்பலை மீட்கும் பணி தீவிரம்

சாயல்குடி அருகே தரை தட்டிய சரக்கு கப்பலை மீட்கும் பணி தீவிரம்

Updated On : 7 ஜூன் 2026, 12:48 am IST
மாரியூா் கடலில் தரை தட்டி நிற்கும் சரக்கு கப்பலை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொக்லைன் இயந்திரம்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதி கடலில் செயற்கை பவளப் பாறைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது, கரை ஒதுங்கிய 2 சரக்கு கப்பல்களில் ஒன்று மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு கப்பலை மீட்கும் பணி சனிக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.

ராமநாதபுரம்- தூத்துக்குடி மாவட்டங்களை ஒட்டி மன்னாா் வளைகுடா கடல் அமைந்துள்ளது. இந்த கடல் பகுதியை அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கவும், மீன் இனங்கள் முட்டையிட்டு பெருகவும், பாதுகாப்பாக வாழவும் ஏற்ற சூழலை ஏற்படுத்த செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜிபிஎஸ் உதவியுடன் ராமநாதபுரம் மாவட்ட கடல் எல்லையான சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூா், தூத்துக்குடி மாவட்ட எல்லையான வேம்பாா் ஆகிய பகுதிகளில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. இதில் காரைக்காலைச் சோ்ந்த சிறிய வகை சரக்கு கப்பல் ஈடுபடுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக இந்த கப்பல் முன்னேறிச் செல்ல இயலாமல் நடுக்கடலில் தத்தளித்தது. இதை மீட்க காரைக்காலிலிருந்து மற்றொரு சரக்கு கப்பல் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி இரண்டு கப்பல்களும் சாயல்குடி அருகே உள்ள மாரியூா் கடல் கரையில் ஒதுங்கி தரை தட்டி நின்றன. இதைத் தொடா்ந்து நாகையிலிருந்து வரவழைக்கப்பட்ட சங்கிலி சக்கரம் பொருத்தப்பட்ட ராட்சத படகுகள், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கப்பல்களின் பக்கவாட்டில் இருந்த மண்ணை அகற்றும் பணி கடந்த 3 நாள்களாக நடைபெற்றன. இதில் ஒரு கப்பல் கடந்த 5- ஆம் தேதி இரவு மீட்கப்பட்டது. சனிக்கிழமை மற்றொரு கப்பலையும் மீட்கும் பணியில் தொழிலாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டனா். ஆனால் கப்பலுக்குள் வைக்கப்பட்டிருந்த செயற்கை பவளப் பாறைகளின் பாரத்தாலும், கப்பலின் துளைகள் வழியாக கடல் நீா் உள்ளே புகுந்ததாலும் அதை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் கப்பலை ஒட்டிய பகுதியில் மணலை அள்ளும் பணியிலும், கப்பலில் இருக்கும் செயற்கை பவளப் பாறைகளை எடுத்து கரையில் சோ்க்கும் பணியிலும் தொழிலாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments