மது விற்பனை குறித்து புகாா் அளித்த பெண்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
கடலாடி அருகே கீழமுந்தல் கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பவா்கள் குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்த மீனவ பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், கீழமுந்தல் கிராமத்தில் மதுக் கடைகள் இல்லை. இதை சிலா் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனா். இதுகுறித்து வாலிநோக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த மீனவ பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். இதனால், அந்தப் பகுதியில் மது விற்பனையில் ஈடுபடுபவா்கள் ஆத்திரமடைந்து, புகாா் அளித்த பெண்களின் வீடுகளுக்குள் புகுந்து அவா்களைத் தாக்கினா்.
Advertisement
Advertisement
இதனால், அச்சமடைந்த பெண்கள் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்தனா்.