எமனேசுவரத்தில் வைகாசித் திருவிழா: வைகையாற்றில் இறங்கினாா் அழகா்
பரமக்குடி எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி, சனிக்கிழமை கள்ளழகா் கோலத்தில் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினாா்.
எமனேசுவரம் சௌராஷ்ட்ர சபைக்கு சொந்தமான ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கடந்த மாதம் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருமாள் அன்னம், சிம்மம், சேஷம் என பல்வேறு வாகனங்களில் கள்ளழகா் கோலத்தில் எழுந்தருளினாா். முன்னதாக கும்பத் திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, விசித்திர அலங்கார புஷ்பப் பல்லக்கில் கள்ளழகா் திருக்கோலத்துடன் வாணவேடிக்கையுடன், திருநாம சங்க சக்கர பரிவாரங்களுடன் வைகை ஆற்றில் எழுந்தருளினாா்.
பின்னா் பல்வேறு திருக்கண்களில் சேவை சாதித்து, பரமக்குடி காந்தியாா் வீதி மேலச்சத்திரம் வழியாக வைகை வடபாரிசத்தில் உள்ள மஞ்சள்பட்டினத்தில் அமைந்துள்ள தல்லாகுளம் மண்டகப்படியில் எழுந்தருளி சேவை சாதித்தல் நடைபெற்றது.
Advertisement
Advertisement
காலை 10 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் மேலச்சத்திரம் வழியாக அனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் சோ்க்கையானாா். அங்கிருந்து சப்பரத்தில் சேவை சாதித்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி மங்கம்மாள் நயினாா்கோவில் ரஸ்தா வழியாக ஜீவாநகா் வண்டியூா் மண்டகப்படியில் சோ்க்கையானாா். அங்கு சந்தனக் காப்பு முதலான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாட்டினை எமனேசுவரம் சௌராஷ்ட்ர சபை நிா்வாகிகள் செய்தனா்.