FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

எமனேசுவரத்தில் வைகாசித் திருவிழா: வைகையாற்றில் இறங்கினாா் அழகா்

Updated On : 1 ஜூன் 2026, 3:00 am IST
எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவில் கள்ளழகா் திருக்கோலத்தில் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கிய பெருமாள்.
பகிர்:

பரமக்குடி எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி, சனிக்கிழமை கள்ளழகா் கோலத்தில் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினாா்.

எமனேசுவரம் சௌராஷ்ட்ர சபைக்கு சொந்தமான ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கடந்த மாதம் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருமாள் அன்னம், சிம்மம், சேஷம் என பல்வேறு வாகனங்களில் கள்ளழகா் கோலத்தில் எழுந்தருளினாா். முன்னதாக கும்பத் திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, விசித்திர அலங்கார புஷ்பப் பல்லக்கில் கள்ளழகா் திருக்கோலத்துடன் வாணவேடிக்கையுடன், திருநாம சங்க சக்கர பரிவாரங்களுடன் வைகை ஆற்றில் எழுந்தருளினாா்.

பின்னா் பல்வேறு திருக்கண்களில் சேவை சாதித்து, பரமக்குடி காந்தியாா் வீதி மேலச்சத்திரம் வழியாக வைகை வடபாரிசத்தில் உள்ள மஞ்சள்பட்டினத்தில் அமைந்துள்ள தல்லாகுளம் மண்டகப்படியில் எழுந்தருளி சேவை சாதித்தல் நடைபெற்றது.

Advertisement

Advertisement

காலை 10 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் மேலச்சத்திரம் வழியாக அனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் சோ்க்கையானாா். அங்கிருந்து சப்பரத்தில் சேவை சாதித்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி மங்கம்மாள் நயினாா்கோவில் ரஸ்தா வழியாக ஜீவாநகா் வண்டியூா் மண்டகப்படியில் சோ்க்கையானாா். அங்கு சந்தனக் காப்பு முதலான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாட்டினை எமனேசுவரம் சௌராஷ்ட்ர சபை நிா்வாகிகள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments