மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் அன்னவாசல் செல்லும் வழியில் உள்ள எஸ்.கரிசல்குளத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கேட்ட வரம் தரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற பொங்கல் வைபவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைத்து முத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு கோயிலில் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஆடிவந்தும், தீ மிதித்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். அதைத்தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் முன்பு முளைப்பாரி சட்டிகளை வைத்து பெண்கள் கும்மி பாடல்களை பாடினர்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பங்குனித் திருவிழாவை முன்னிட்டு கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்து இரவு நேரத்தில் ஜொலித்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி செர்டு எல்.பாண்டி குடும்பத்தினர் செய்திருந்தனர்.