முகப்பு
சிவகங்கை

நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 ஜூன், 2022 at 4:16 PM
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:56 PM

சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.பின்னர் விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, கோயில் முன்பு உள்ள கொடிமரத்துக்கு தைலம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனைப் பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன்பின் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

Advertisement

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கண்ணுடைய நாயகியம்மன்.

ஜூன் 4 முதல் ஜூன் 14 வரை தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் கண்ணுடையநாயகி அம்மன் வெள்ளி கேடயம், சிம்மம், காமதேனு, யானை, பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். ஜூன் 10 ஆம் தேதி மாலையில் கோயில் உள்பிரகாரத்தில் தங்க ரதத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஜூன் 11 ஆம் தேதி சனிக்கிழமை வெள்ளி ரத விழாவும், ஜூன் 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். அன்று இரவு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறற உள்ளது. ஜூன் 13 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், அன்று இரவு புஷ்பப் பல்லக்கில் கண்ணுடைய நாயகி அம்மன் எழுந்தருளி வீதி உலா வருதலும் நடைபெறும். ஜூன் 14 ஆம் தேதி உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவு பெறும்.

இவ்விழாவில் நாட்டரசன்கோட்டை, சிவகங்கை, கல்லல் ஆகிய பகுதிகளிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ, கோயில் சரக கண்காணிப்பாளர் பி.சரவண கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.