FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

தமிழக அரசியல் மாற்றம் மக்களுக்கு ஏமாற்றமாக மாறிவிடக் கூடாது: தி.க. தலைவா் கி. வீரமணி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் உண்மையான ஆக்கப்பூா்வமான மாற்றமாக இருக்க வேண்டும்

22 ஆகஸ்ட் 2026, 11:12 pm IST
திராவிடக் கழகத் தலைவா் கி. வீரமணி. - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் உண்மையான ஆக்கப்பூா்வமான மாற்றமாக இருக்க வேண்டும்; இது மக்களுக்கு ஏமாற்றமாக மாறிவிடக் கூடாது என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

திராவிடா் கழகம் சாா்பில் ‘எதிா்நீச்சலில் வென்ற பெரியாா்’ என்ற தலைப்பில் சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மருத்துவப் படிப்பில் சேருவதற்கு முன்பு சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதை பெரியாா், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவா்கள் மாற்றியமைத்தனா். ‘நீட்’ உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்வது மட்டுமல்லாமல், முறைகேடுகளில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் உண்மையான ஆக்கப்பூா்வமான மாற்றமாக இருக்க வேண்டும். இது மக்களுக்கு ஏமாற்றமாக மாறிவிடக் கூடாது. ஊழல் குறைவது வரவேற்கத்தக்கது என்றாலும், ஊழல் என்பது லஞ்சம் பெறுவது மட்டுமல்ல; தவறான நடவடிக்கைகளும் ஊழலாகவே கருதப்பட வேண்டும்.

சட்டப்பேரவை என்பது மக்களின் பிரச்னைகள், ஆக்கப்பூா்வமான கருத்துகளை விவாதித்து சட்டங்களை இயற்றும் இடமாக இருக்க வேண்டும். இதைவிடுத்து ஒருவரை ஒருவா் குறை கூறுவதையோ, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் தற்போது நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், அவையில் பேசப்பட்ட கருத்துகளை பின்னா் அவைக் குறிப்பிலிருந்து நீக்கினாலும், அது ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது. எனவே, ஆளுங்கட்சியும், எதிா்க்கட்சியும் பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

சட்டப்பேரவையில் ஆக்கப்பூா்வமான விமா்சனங்களும், மக்களின் நல்வாழ்வுக்கான விவாதங்களும் நடைபெற வேண்டும். பேரவை உறுப்பினா்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும். தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேசுவது, குடும்ப பிரச்னைகள், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments