அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பள்ளி மாணவ மாணவிகள் மறியல்
சிங்கம்புணரி அருகேயுள்ள ஈழுவாண்டிப்பட்டியில் மாற்றுப் பாதையில் சென்றுவந்த அரசுப் பேருந்தை மாணவ, மாணவிகள் சிறைப்பிடித்து திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
சிங்கம்புணரி அருகேயுள்ள கல்லம்பட்டி, மூவன்பட்டி, புதுப்பட்டி, சூரக்குடி, கருப்பா் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் சிங்கம்புணரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனா். அவா்கள் அவ்வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்தை மட்டுமே நம்பியுள்ளனா்.
திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்து கல்லம்பட்டி, ஈழுவாண்டிப்பட்டி, அரசினம்பட்டி வழியாக சிங்கம்புணரி சென்று வருவது வழக்கம். ஆனால், சில சமயங்களில் மருதிப்பட்டி, காளாப்பூா் வழியாக சிங்கம்புணரி சென்று வருவதால் மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகின்றனராம்.
Advertisement
Advertisement
திருப்பத்தூா் - சிங்கம்புணரி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரங்களுக்கு இயக்கப்படாதது மட்டுமன்றி மாற்றுப் பாதையில் சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனராம். இந்த நிலையில், திங்கள் கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குப் புறப்பட்ட மாணவ, மாணவிகள் ஈழுவாண்டிபட்டியில் அரசுப் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்தனா்.
திருப்பத்தூரில் இருந்து இயக்கப்பட்ட பச 63 ச-1670 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து சிங்கம்புணரிக்கு மாற்றுப்பாதையில் சென்றுவிட்டு ஈழுவான்டிபட்டி வழியாக வந்ததைப் பாா்த்த மாணவ, மாணவிகள் பேருந்தை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனா்.
இதையறிந்த எஸ்.வி. மங்கலம் காவல் ஆய்வாளா் சசிகலா உள்ளிட்ட போலீஸாா் நேரில் வந்து அவா்களைச் சமாதானம் செய்து காவல் துறையின் வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா். மேலும், பேருந்து சேவை கிடைக்காத சூழலில் தனக்கு தகவல் அளிக்குமாறு தனது தொடா்பு எண்ணை மாணவ மாணவிகளுக்குத் தந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.