FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் 9 ஆண்டுகளுக்கு பின் மூல வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் 9 ஆண்டுகளுக்கு பின் மூல வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 தேனி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, மேகமலை, பொம்மராஜபுரம், இந்திராநகர், காந்திகிராமம் ஆகிய வனப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
  தென்மேற்கு பருவமழையால் கடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 வெள்ள நீரை கண்மாய்கள் மற்றும் குளங்களில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் வைகை ஆற்றின் தண்ணீரால் வைகை அணை நீர்மட்டம் விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து: போடி, போடிமெட்டு, குரங்கணி உள்ளிட்ட மலை கிராமங்களில் கடந்த செவ்வாய், புதன்கிழமை நல்ல மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பிள்ளையார் அணை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊத்தாம்பாறை ஆறு, நண்டலை ஆறு, சாம்பலாறு,  தாதனோடை ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.  
 6-ஆவது நாளாக தடை: கேரள பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக மலைப்பாதையில் நிலச்சரிவு, மரங்கள் சாய்ந்து வருகின்றன. 
 இதனால், தோட்டத் தொழிலாளர்களின் வாகனங்களுக்கு 6-ஆவது நாளாக புதன்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.  இதனால் போடி, தேவாரம், ராசிங்காபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 400-க்கும் மேற்பட்ட ஜீப், வேன்களில் செல்லும் இரண்டாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழந்து சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments