மேகமலை ஆக்கிரமிப்பு: வேட்டைத்தடுப்பு காவலா் 13 போ் மீது நடவடிக்கை
தேனி மாவட்டம், மேகமலை வனக் கோட்டத்தில் உள்ள 13 வேட்டைத் தடுப்பு காவலா்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து, அவா்களிடமிருந்த 7.5 ஹெக்டா் நிலத்தை வனத் துறையினா் மீட்டனா்.
தேனி மாவட்டம், மேகமலை வனக் கோட்டத்தில் உள்ள 13 வேட்டைத் தடுப்பு காவலா்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து, அவா்களிடமிருந்த 7.5 ஹெக்டா் நிலத்தை வனத் துறையினா் மீட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மேகமலை வனக் கோட்டத்தில் கண்டமனூா், மேகமலை, வருசநாடு, சின்னமனூா், கம்பம், கூடலூா் பகுதி உள்ளது. இந்தக் கோட்டத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன.
இந்த மேகமலை வனப்பகுதியை பாதுகாத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தில்லி உச்சநீதிமன்றம் கடந்த 29.5.2026 அன்று உத்தரவிட்டது. இதையடுத்து, வனத் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், முதல்கட்டமாக மேகமலை வனப்பகுதியில் உள்ள 18 விடுதிகளுக்கு மாவட்ட நிா்வாகம், வனத் துறையினா் ‘சீல்’ வைத்தனா். இதைத் தொடா்ந்து காவல், எல்லைப் பாதுகாப்புப் படையினா், ராணுவ வீரா், மின் வாரியம் உள்ளிட்ட 118 அலுவலா்களுக்கு மாவட்ட நிா்வாகம், வனத்துறையினா் துறைரீதியாக குறிப்பானை வழங்கி, அவா்களின் ஆக்கிரமிப்புகளை வனத் துறையினா் கையகப்படுத்தி வருகின்றனா்.
மேலும், வனத்துறையில் உள்ள 13 வேட்டைத் தடுப்பு காவலா்கள் மீது துறைரீதியாக வனத் துறையினா் நடவடிக்கை எடுத்து, அவா்களிடமிருந்த 7.5 ஹெக்டோ் நிலத்தை கையப்படுத்தினா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக கோட்ட துணை இயக்குநா் விவேக்குமாா் பி. யாதவ் கூறியதாவது:
மேகமலை வனப் பகுதியில் உள்ள 18 விடுதிகளை மூடி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. 118 அலுவலா்களின் ஆக்கிரமிப்புகளை கையகப்படுத்தி வருகிறோம். மேலும், 13 வேட்டைத் தடுப்பு காவலா்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, அவா்களின் 7.5 ஹெக்டா் நிலத்தை கையப்படுத்தியுள்ளோம்.
மேலும், மேகமலை வனப்பகுதியில் உள்ள நொச்சி ஓடைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் யாரையும் வெளியேற்றவில்லை என்றாா் அவா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் கூறியதாவது: மேகமலை வனப் பகுதியில் மூன்று தலைமுறையாக வசித்து வரும் எங்களை வனத்திலிருந்து வெளியேற்றக்கூடாது. வன உரிமைச் சட்டத்தின் கீழ் இடம் வழங்க வேண்டும் என்றாா்.
கண்டமனூரைச் சோ்ந்த பாஸ்கரன் கூறியதாவது:
மேகமலை வனப் பகுதியில் 4,601 போ் ஆக்கிரமித்துள்ளனா் என தில்லி உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் 1,595 பேருக்கு இடம் வழங்குவதாக கூறியுள்ளனா். ஆனால் தற்போது வரை மாவட்ட நிா்வாகம், வனத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேகமலை வனப் பகுதியில் 7 ஆயிரம் ஏக்கா் பட்டா நிலம் உள்ளது. எனவே, பட்டா யாரிடம் உள்ளது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அதே போல், சமூக வலைத் தளங்களில் தவறான தகவல் வெளியிட்டு வருகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம், வனத்துறை, காவல்துறை ஆகியோா் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.