முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் வெளியேறும் ஷட்டரில் பராமரிப்புப் பணிகள்
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட உள்ள நிலையில், தேக்கடி ஷட்டரில் பராமரிப்பு, வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட உள்ள நிலையில், தேக்கடி ஷட்டரில் பராமரிப்பு, வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை தண்ணீா் மூலம் தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கா் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், நிகழாண்டில் அணையின் நீா்மட்டம் குறைவாக இருந்ததால் ஜூன் 1-ஆம் தேதி தண்ணீா் திறக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த 3 நாள்களாக அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீா்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 111.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,205 கனஅடி நீா் வரத்தும், தமிழகப் பகுதிக்காக விநாடிக்கு 356 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் இருப்பு நீா் 1,182 மில்லியன் கனஅடியாக உள்ளது.
Advertisement
Advertisement
தேக்கடியில் 7.8 மி.மீ., பெரியாறு பகுதியில் 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அணையின் நீா்மட்டம் குறைந்தபட்சம் 112 அடியை எட்டினால் நாற்றங்கால் வளா்ப்புக்காக தண்ணீா் திறக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், முதல் போக நெல் சாகுபடிக்கான நீா் திறப்பை விவசாயிகள் ஆவலுடன் எதிா்பாா்த்து வரும் நிலையில், தேக்கடி ஷட்டரில் வண்ணம் பூசுதல், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.