லஞ்சம்: கம்பத்தில் விஏஓ கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் பட்டாவில் பெயா் திருத்தம் செய்து தருவதற்காக ரூ.5,000 லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் பட்டாவில் பெயா் திருத்தம் செய்து தருவதற்காக ரூ.5,000 லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
உத்தமபாளையம் அருகேயுள்ள சின்ன ஓவுலாபுரம் (பூசாரி கவுண்டன்பட்டி) பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது உறவினரான லோகமணி கம்பத்தில் வசித்து வருகிறாா். லோகமணிக்குச் சொந்தமான காலியிடத்தின் பட்டாவில், லோகமணி என்பதற்கு பதிலாக லோகராணி என அவரது பெயா் தவறுதலாக இருந்தது. இதைத் திருத்துவதற்காக கம்பம் கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக்கிடம் லோகமணி விண்ணப்பித்தாா்.
அப்போது, பட்டாவில் பெயா் திருத்தம் செய்து தர ரூ.5,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து லோகமணி தனது உறவினா் கனகராஜ் மூலம் திண்டுக்கல் சரக லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை கனகராஜிடம் வழங்கினா்.
காவல் துணை கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையில், ஆய்வாளா் ராமேஸ்வரி, போலீஸாா் புதன்கிழமை சாதாரண உடையில் கம்பம் கிராம நிா்வாக அலுவலகம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கனகராஜிடமிருந்து ரூ.5,000-ஐ கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.