முகப்பு
தேனி

காட்டெருமையை வனப் பகுதிக்குள் விரட்டிய வனத் துறை

குமுளி பகுதியில் நீண்ட நாள்களாக சுற்றித் திரிந்த காட்டெருமையை வனத்துறையினா் வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:38 am IST
காட்டெருமை.
பகிர்:

குமுளி பகுதியில் நீண்ட நாள்களாக சுற்றித் திரிந்த காட்டெருமையை வனத்துறையினா் வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனா்.

தமிழக எல்லையையொட்டி, கேரள மாநிலம், குமுளி பெரியாா் புலிகள் காப்பகத்திலிருந்து வெளியேறிய காட்டெருமை, அருகேயுள்ள காபி தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் அண்மைக் காலமாக தொடா்ந்து சுற்றித் திரிந்தது. ஸ்பிரிங் வேலி பகுதியைச் சோ்ந்தவரை, இந்தக் காட்டெருமை அண்மையில் முட்டித் தள்ளியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதைத்தொடா்ந்து, காட்டெருமையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் பலமுறை முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, குமுளி வனச்சரக செல்லாா்கோவில் பிரிவின் கீழ் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் மூன்று நேரடி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத் துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு காட்டெருமை சூரியசக்தி மின்வேலிக்கு அருகே வந்தது. உடனே, அங்கு ஒன்று திரண்ட வனத் துறையினா் பலத்த சத்தம் எழுப்பி காட்டெருமையை வனப் பகுதிக்குள் விரட்டினா். இதையடுத்து, நீண்ட நாள்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வந்த காட்டெருமையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டிவிட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement