ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் காலி குடங்களுடன் முற்றுகை
விருதுநகர் அருகே குல்லூர் சந்தை கிராமத்தில் குடிநீர் முறையாக விநியோகிக்கக் கோரி, அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காலி
விருதுநகர் அருகே குல்லூர் சந்தை கிராமத்தில் குடிநீர் முறையாக விநியோகிக்கக் கோரி, அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
இக் கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழில் செய்து வருகின்றனர். இதனால், தெரு குழாய்களில் குடிநீரைப் பிடித்து வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வாரத்துக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதுடன், எந்த நேரத்தில் வருகிறது என தெரியவில்லை. இதனால், குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாமல், குடம் ரூ. 10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாகப் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல், கிராமத்தில் வாருகால் வசதி இல்லாததால், கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுவதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. மேலும், தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதால், பெண்கள் இரவில் வெளியே வர அச்சப்படுகின்றனர்.
எனவே, இப்பிரச்னைகளை தீர்க்கக் கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், திங்கள்கிழமை காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களில் 5 பெண்களை மட்டும் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) உதயகுமாரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.