26.7.1976: தி.மு.க. அரசு மீதுள்ள புகார்கள் குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு வரும்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
ஓம் மேத்தா தகவல் - தி.மு.க. அரசு மீதுள்ள புகார்கள் குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு வரும் - மாஜி மந்திரிகளில் புதிதாக சிலரும் சேர்க்கப்படலாம்
சென்னை, ஜூலை. 25 - முந்தைய தி.மு.க. அரசு நிர்வாகத்தின் போது நடைபெற்றதாக சில முறைகேடுகள், மோசடிகள் குறித்து இப்போதைய தமிழக அரசும், மத்திய சர்க்காரும் கொடுத்துள்ள குறிப்பிட்ட இரு புகார்கள் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது. இந்த விசாரணை முடிவுற்றதும் சம்பந்தப்பட்டவர்கள் - இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை (கிரிமினல் பிராஸிக்யூஷன்) எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை துணை மந்திரி ஓம் மேத்தா கூறினார்.
இது பற்றி மேற்கொண்டு விவரங்கள் எதையும் வெளியிட அவர் மறுத்து விட்டார். மத்திய புலனாய்வுத் துறையினர் இந்த இரு புகார்கள் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர்களது புலன் விசாரணை முடிந்துவிடும் என்று நம்புகிறோம். புலனாய்வு முடிந்ததும் கிரிமினல் வழக்கு போடப்படும் என்பதை மட்டும் இப்போதைக்கு தெரிவிக்க முடியும்” என்று ஓம் மேத்தா விளக்கினார்.
Advertisement
Advertisement
தலைமைச் செயலகத்தில் ஓம் மேத்தா இன்று நண்பகலில் கவர்னரின் ஆலோசகர்களான பி.கே. சுப்பிரமணியன், தவே, தலைமைச் செயலாளர் ஆர்.வி. கார்த்திகேயன், இதர உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு, அமைதி பராமரிப்பு, இருபது அம்சத் திட்ட அமல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
கூட்ட முடிவில் நிருபர்களுக்கு ஓம் மேத்தா பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- சர்க்காரியா விசாரணைக் கமிஷன்முன்பு ஏராளமான சத்தியப் பிரமாண வாக்கு மூலங்களை (அபிடவிட்) பல தரப்பட்டவர்கள், பிரமுகர்கள் தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையில் குற்றச்சாட்டுகள் மீதான புலன் விசாரணையையும் அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள். இது பற்றி முழுமையான - விரிவான அறிக்கை விரைவில் கிடைக்கக்கூடும்.
முதல்வர், முன்னாள் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து மேலும் பல புகார்கள் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமுள்ளன. இவை பற்றியும் விசாரிக்கப்படுகிறது. ...
ஆஸ்திரேலியா வழியாக ஒலிம்பிக் மைதானத்துக்கு பயங்கரவாதிகள்?
சிட்னி, ஜூலை. 25 - 6 பயங்கரவாதிகள் கொண்ட ஒரு கூட்டம் (5 பேர் ஆண்கள், ஒருவர் பெண்) ஆஸ்திரேலியாவுக்கு வந்து கொண்டிருப்பதாக சர்வதேசப் போலீசிடமிருந்து ஒரு தகவல் வந்ததன் பேரில், ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கியமான துறைமுகங்களெல்லாம் கடும் எச்சரிக்கை செய்யப்பெற்றுள்ளன.
ஜெர்மனியிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன் இவர்கள் மாயமாய் மறைந்து விட்டார்கள் என்றும், கலப்பட ஐரோப்பிய, மத்திய கிழக்கு பாஸ்போர்ட்டுகளில் இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துகொண்டிருப்பதாகவும் தகவல் வந்திருப்பதாக ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஞாயிறு அன்று வெளியான பத்திரிகை, "சன் ஹெரால்டு" அரேபிய கொரில்லாக்கள் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாண்ட்ரீல் நகருக்கு வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி ஆஸ்திரேலிய விமான நிலையப் போலீசார் எச்சரிக்கப்பட்டிப்பதாகவும், ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருக்கிறது. அல்ஜீரியா அல்லது ஸ்விஸ் பாஸ்போர்ட்டுகளில் இந்த பயங்கரவாதிகள் வருவதாகக் கருதப்படுகிறது என்று "சன் ஹெரால்டு" செய்தி கூறியது. ஆனால் இதைப் பற்றி அதிகாரிகள் வட்டாரங்களில் எந்தவிதமான கருத்தும் கூறப்படவில்லை.
சிங்கப்பூர் விமான நிலையமும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீசார் கூறினார்கள்.
26.7.1976: Criminal cases regarding complaints against the DMK government will be filed soon.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.