விருதுநகர் அருகே விவசாய களம் அமைத்துத் தர விவசாயிகள் வலியுறுத்தல்
கருப்பம்பட்டி அருகே களம் இல்லாததால், அறுவடை செய்யப்பட்ட சோளப் பயிர்களை விருதுநகர்- அழகாபுரி சாலையில்
கருப்பம்பட்டி அருகே களம் இல்லாததால், அறுவடை செய்யப்பட்ட சோளப் பயிர்களை விருதுநகர்- அழகாபுரி சாலையில் விவசாயிகள் உலர வைக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், எனவே விவசாய களம் அமைத்து தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகள் வானம் பார்த்த பூமியாக உள்ளதால், எரிச்சநத்தம், செங்குன்றாபுரம், பாவாலி, வடமலைக்குறிச்சி, கருப்பம்பட்டி, பாலவநத்தம், மெட்டுக்குண்டு, மீசலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சிவப்பு சோளம், மக்காச்சாளம், கேழ்வரகு ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.
அதில், தற்போது சிவப்பு சோளம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கூலித் தொழிலாளர்கள் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட விவசாயிகளே தங்களது குடும்பத்துடன் சோளத்தை அறுவடை செய்து வருகின்றனர்.
இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட தானியத்தை பிரித்தெடுக்க களம் இல்லாததால் ஆபத்தான நிலையில் சாலைகளில் அவற்றை உலர வைக்கின்றனர். அதில், வாகனங்கள் ஏறி சென்றவுடன், உதிர்ந்த சோளத்தை சேகரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, விருதுநகர்- அழகாபுரி செல்லும் சாலை சீரமைக்கப்பட்டதால் லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், சோளப் பயிர்களை சாலையில் உலரப் போடும் பணியில் விவசாயிகள் ஈடுபடும் போது அவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலையுள்ளது. மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட கிராமங்களில் களம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.