திருப்பட்டினத்தில் ஆடிப்பூர விழா: மின் அலங்கார சப்பரப்படலில் அம்மன் வீதியுலா
திருப்பட்டினத்தில் நடைபெறும் ஆடிப்பூர விழாவையொட்டி மின் அலங்கார சப்பரத்தில், ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
திருப்பட்டினத்தில் நடைபெறும் ஆடிப்பூர விழாவையொட்டி மின் அலங்கார சப்பரத்தில், ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
திருப்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவம் கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.
பகல் வேளையில் ஆடிப்பூரத்தம்மன் பிராகாரப் புறப்பாடும், இரவு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி சூரிய பிரபை, 5-ஆம் தேதி சந்திர பிரபை, 6-ஆம் தேதி பூத வாகனத்திலும், 7-ஆம் தேதி அன்னவாகனத்திலும் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மின் அலங்கார சப்பரப் படல் வீதியுலா புதன்கிழமை இரவு நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் ஸ்ரீ ஆடிப்பூரத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டார். சோடச உபசார சிறப்பு தீபாராதனைகளுக்குப் பின் பிராகாரப் புறப்பாடு செய்யப்பட்டு, மின் அலங்கார சப்பரத்திற்கு எழுந்தருளச் செய்யப்பட்டார்.
சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் சப்பரத்தை பக்தர்கள் நான்கு வீதிகள் வழியாக இழுத்துச்சென்றனர். ஒவ்வொரு பகுதியிலும் சப்பரம் நிறுத்தப்பட்டது. ஏராளமானோர் அர்ச்சனை செய்து அம்பாளை வழிபாடு செய்தனர்.
முக்கிய நிகழ்ச்சிகளான வெண்ணெய்த்தாழி சேவை, தேரோட்டம், மின் அலங்கார புஷ்ப பல்லக்கு வீதியுலா உள்ளிட்டவை அடுத்தடுத்த நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.