FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

மாங்கனித் திருவிழாவுக்காக காரைக்காலில் குவிக்கப்படும் மாங்கனிகள்

மாங்கனித் திருவிழாவுக்காக காரைக்காலில் வெளியூர்களிலிருந்து பல்வேறு வகையான மாங்கனிகள் லாரிகளில் வந்து இறக்கப்படுகின்றன.

Updated On : 26 ஜூன் 2018, 8:42 am IST
பகிர்:

மாங்கனித் திருவிழாவுக்காக காரைக்காலில் வெளியூர்களிலிருந்து பல்வேறு வகையான மாங்கனிகள் லாரிகளில் வந்து இறக்கப்படுகின்றன.  மாங்கனிகளை சுவாமி வீதியுலாவின்போது இறைப்பதற்காகவும், வீட்டில் படையலுக்காகவும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் மாங்கனித் திருவிழாவில் பக்தர்களை நோக்கி வீட்டின் மாடியிலிருந்தும், வணிக நிறுவனங்களின் மேல் தளத்திலிருந்தும் மாங்கனிகளை இறைப்பது வழக்கமாக உள்ளது. ஸ்ரீ பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா நடைபெறும்போது, சப்பரம் நகர்ந்ததும் அதற்குப் பின்னால் வரும் பக்தர்களை நோக்கி மாங்கனிகள் வீசப்படும். இதனை திருமணமாக வேண்டியும், குழந்தைப் பேறு வேண்டியும் பிரார்த்தனை செய்துகொண்ட பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் கைகளாலும், வலை கூடையிலும் பிடித்துச் செல்வர். பிச்சாண்டவர் மீதான ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருகின்றனர்.
இச்சிறப்பு மிக்க நிகழ்ச்சி காரைக்காலில் நாளை புதன்கிழமை  நடைபெறவுள்ளது.  காரைக்கால் பகுதியில் மா விளைச்சல் இல்லாத நிலையில்,  வெளியூர்களில் இருந்து லாரிகளில் பல்வேறு வகையான மாங்கனிகள் வந்து இறக்கப்படுகின்றன. 
சுவாமி வீதியுலா செல்லும் சாலையில் உள்ள வீடுகள், கட்டடங்களில் உள்ளோர், மாங்கனிகளை முன்னதாகவே வாங்கி வைத்திருப்பர். இதற்காக காரைக்காலுக்கு திண்டுக்கல், பரவை, திருக்கடையூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாங்கனிகள் லாரிகளில் வந்து இறக்கப்படுகின்றன. குறிப்பாக நீலம், ஒட்டு என்கிற இரு வகை மாங்கனிகளை மட்டுமே மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும் ருமானி, கீரி உள்ளிட்ட வகைகளும் குவிக்கப்பட்டுள்ளன. அளவில் சிறிய வகையாக உள்ளவை மட்டுமே இறைப்பதற்கு பயன்படுத்தப்படுவதால், ஆங்காங்கே விற்பனைக்காக குவிக்கப்பட்டிருக்கும் மாங்கனி குவியலில் இருந்து, சிறிய அளவு பழங்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். ஒட்டு, நீலம் வகை கிலோ ரூ.30-க்கும், பிற வகைகள் ரூ.40, ரூ.50 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், செவ்வாய், புதன்கிழமையில் மாங்கனிகளின் வரத்து மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் குறைந்தது 5 கிலோவிலிருந்து 10, 20 கிலோ அளவில் மாங்கனிகளை வாங்கிச் செல்கின்றனர். நீலம் வகை பழம் வீசுவதற்கும், ஒட்டுப் பழம் சுவாமிக்கு படையலுக்கும் வாங்கிச் 
செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments