விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா, ஐந்திலைக் கரைசல் தயாரிப்புப் பயிற்சி
விவசாயத்துக்குரிய பஞ்சகவ்யா, ஐந்திலைக் கரைசல் தயாரிப்பு குறித்து விவசாயிகளிடையே வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாயத்துக்குரிய பஞ்சகவ்யா, ஐந்திலைக் கரைசல் தயாரிப்பு குறித்து விவசாயிகளிடையே வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் துறையின் அங்கமான வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ஆத்மா) மூலம், கூடுதல் வேளாண் இயக்குநர் கே. மதியழகன், இணை இயக்குநர் முகம்மது தாசீர் ஆகியோர்ஆலோசனையின்படி, காரைக்கால் பகுதி மேலகாசாக்குடி உழவர் உதவியகத்தில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், பாரம்பரிய ரகங்களின் முக்கியத்துவம், இயற்கை இடுபொருள்களை சந்தைப்படுத்துவது குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. மேலகாசாக்குடி பகுதி வேளாண் அலுவலர்அமினா பீவி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். துணை வேளாண் இயக்குநர் (இடுபொருள்) கணேசன் பயிற்சி முகாமை தொடங்கிவைத்து, இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் குறித்த நுணுக்கங்களை விளக்கிப் பேசினார். மேலகாசாக்குடி பகுதி மணல் தரத்துக்கேற்ப செய்யக்கூடிய பயிர் ரகங்கள், காய்கறி சாகுபடி குறித்தும் வேளாண் அலுவலர்கள் கருத்துகளை எடுத்துக்கூறினர்.
பஞ்சகவ்யா அமிர்த கரைசல், ஐந்திலைக் கரைசல் தயாரிக்கும் முறை குறித்து வேளாண் அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர். பஞ்சகவ்யாவுக்கு பசுஞ்சாணம், கோமியம், பால், தயிர், கடலைப் புண்ணாக்கு, கனிந்த வாழைப்பழம், இளநீர், கரும்புச்சாறு, கள் ஆகியவை தேவை என தெரிவித்த அலுவலர்கள், கலனில் வைத்து தயாரிப்பது குறித்தும், பயன்படுத்தும் விதம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்த பின்னர், பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு பஞ்சகவ்யா கரைசலும், ஐந்திலைக் கரைசலும் புட்டியில் அளித்தனர். மேலும், இயற்கை வேளாண்மை இடுபொருள் தொழில்நுட்பம் குறித்த விளக்கக் கையேட்டையும் அளித்தனர்.
விவசாயிகள் எழுப்பிய வேளாண் சந்தேகங்களுக்கு அலுவலர்கள் விளக்கம் தந்தனர். இந்த பயிற்சியில், சுமார் 50 விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.