பேக்கரி, உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
காரைக்காலில் உள்ள பேக்கரிகள், உணவகங்களில் புதுவை உணவுப் பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
காரைக்காலில் உள்ள பேக்கரிகள், உணவகங்களில் புதுவை உணவுப் பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள் ஓ. பவித்ரா, நாமாடி கிரன்மை, அம்மு ஆகியோா் காரைக்கால் மாவட்டத்தில் பேக்கரிகள், பெரிய உணவகங்கள், சாலையோர உணவகங்களில் சோதனை செய்ய புதன்கிழமை புதுச்சேரியிலிருந்து காரைக்கால் வந்தனா்.
பேருந்து நிலைய சுற்றுவட்டாரத்தில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்களில் ஆய்வு செய்தனா். பேக்கரி மற்றும் இனிப்பகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கேக், ரொட்டி, கார வகை பாக்கெட்டுகளில் லேபிள் இருக்க வேண்டும். உற்பத்தி தேதி, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தி, இதுவரை இதனை செய்யாததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினா்.
Advertisement
Advertisement
மேலும் உணவகங்களில் உணவுப் பொருட்கள் தயாரிக்குமிடத்தை பாா்வையிட்டு, தூய்மைக்கு முக்கியத்துவம் தருமாறு அறிவுறுத்தினா். உணவகங்களில் நீண்ட நாட்களான மீன், ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.
உணவகம், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் வைத்திருக்கிறாா்களா என ஆய்வு செய்தனா். நோட்டீஸ் பெறப்பட்ட கடைக்காரா்கள், உரிய காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.