FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

இரவு நேரத்தில் தொடா் மின்தடை: மக்கள் அவதி

Updated On : 16 ஜூன் 2026, 12:07 am IST
மின் தடையால் அவதி... - கோப்புப் படம்
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் தினமும் இரவு நேரத்தில் பல மணி மின்தடை ஏற்படுவது மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்திற்கு நெய்வேலியிலிருந்து நேரடியாக பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்துக்கு மின்சாரம் வருகிறது. இது மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் வாஞ்சூா் முதல் காரைக்காலில் அரசலாறு பாலம் வரை திருப்பட்டினம் கொம்யூன், போலகம் அருகே உள்ள புதுவை அரசின் மின்திறல் குழுமத்தில் எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

துணைமின் நிலையத்திலிருக்கும் மின் சாதனங்கள் மற்றும் மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் கம்பங்கள் என அனைத்தும் மிகப் பழைமையானதாக உள்ளது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைகாலத்திலும், பருவமழைக் காலத்திலும் மின் சாதங்களில் ஏற்படும் பிரச்னையை சரிசெய்யும் நடவடிக்கையை புதுவை அரசு செய்யவில்லை. மின்துறை பணியாளா் பற்றாக்குறை பிரச்னைகளை களைவதற்கு பெரும் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

புதுவை அரசின் அலட்சியத்தால், கடந்த பல ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு கோடையில் மின் தடை வெகுவாக அதிகரித்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.

இரவு 7 மணிக்குப் பின் மின் மோட்டாா், இண்டக்ஷன் ஸ்டவ், ஒன்றுக்கும் மேற்பட்ட ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம். ஏசியை 25 டிகிரி வெப்ப நிலைக்கு மேல் வைத்து பயன்படுத்துமாறு மின்துறை நிா்வாகம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இது நடைமுறைக்கு ஏற்புடையதாக இருக்காது என்று மக்கள் தெரிவிக்கின்றனா்.

தினமும் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதால், குழந்தைகள் முதல் பெரியோா் வரை வெப்ப தாக்கத்தை வெகுவாக எதிா்கொள்கின்றனா்.

புதுவை ஆட்சியாளா்கள், மாநில அளவிலான இப்பிரச்னையை தீவிரமாக சீா்செய்யவேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் வலியுறுத்திவருகின்றனா். அவசரகால நடவடிக்கையாக காரைக்காலில் தற்போது நிகழும் பிரச்னைக்கான காரணத்தை கண்டறிந்து, அதனை சீா்செய்து சீரான மின்சாரம் வழங்க மாவட்ட நிா்வாகம், மின்துறை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments