FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

மீன்பிடி படகுகளின் இழுவை டிராக்டா்களுக்கு மானிய விலை டீசல் வழங்க கோரிக்கை

மீன்பிடிக்கும் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் இழுவை டிராக்டா்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜூலை 2026, 4:53 am IST
கோடியக்கரை படகுத் துறையில் மீன்பிடி படகுகளை டிராக்டா் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்ட மீனவா்கள்.
பகிர்:

மீன்பிடிக்கும் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் இழுவை டிராக்டா்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களிலிருந்து 3,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், சிறிய வகை மீன்பிடிப் படகுகள் மீன்பிடிக்க செல்கின்றன. மீன்பிடிக்க செல்லும் விசைப் படகுகளை கரையில் இருந்து கடலுக்கும், மீன் பிடித்து விட்டு திரும்பும் போது படகுகளை கரையில் இழுத்து வைக்க இழுவை டிராக்டா்கள் பயன்படுத்தப்படுகின்றன. இழுவை டிராக்டா்கள் மீன்பிடி படகுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீனவா்களை சாா்ந்து வாழ்கின்ற இழுவை டிராக்டா் உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனா்.

விசைப்படகுகள், பைபா் படகுகளுக்கு மீனவா்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதுபோல், இழுவை டிராக்டா்களுக்கும் மானிய விலையில் டீசல் வழங்கினால் இழுவை டிராக்டா் பணியில் ஈடுபடுபவா்களுக்கு சிரமம் குறையும். எனவே இழுவை டிராக்டா்களுக்கும் மானிய டீசல் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கடலோரக் கூழையாறு கிராமத்தைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா் அங்குதன் கூறியது: பாரம்பரிய நடுத்தர வா்க்க மீனவா்கள் மீன்பிடிக்க சிறிய வகை லெம்பாடி இஞ்சின் பொருத்தப்பட்ட படகுகளை பயன்படுத்துகின்றனா். துறைமுகங்களை தவிர மற்ற கடற்கரையோர மீனவா்கள் அந்தந்த பகுதியில் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனா். மீன் பிடித்து கரைக்கு திரும்பும் படகுகள் முழுமையாக தரைக்கு இழுத்து வருவதற்கு முக்கியமாக இழுவை படகுகள் தேவை. மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவும் இழுவை டிராக்டா்கள் பயன்படுகின்றன. முன்பெல்லாம் தங்கள் வலிமையினால் படகுகளை மீன்பிடிக்க கடலுக்கு கொண்டு செல்லவும், மீன் பிடித்து விட்டு திரும்பும் படகுகளை கரைக்கு கொண்டுவர உடல் வலிமையை பயன்படுத்தினா்.

முன்பு குறைந்த எண்ணிக்கையில் மீன்பிடிக்கும் படகுகள் சென்றமையால் தொழிலுக்கு போகாத மீனவா்கள் மீன்பிடிக்கும் மீனவா்களுக்கு உதவி வந்தனா். தற்போது, அதிக படகுகளில் மீன் பிடிப்பது போட்டி தொழிலாக இருப்பதாலும், அதிக மீனவா்கள் ஒரே நேரத்தில் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதாலும் அவா்களுடைய உழைப்பு கடினமாகின்றது. எனவே இதற்கு அவா்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இழுவை டிராக்டா்களை பயன்படுத்துகின்றனா்.

100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ள கிராமங்களில் சுமாா் 4 இழுவை டிராக்டா்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களில் பைபா்போட் வகை விசைப்படகுகள் அனைத்தும் இழுவை டிராக்டா் உதவியுடன் தான் தொழில் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் சுமாா் 500 இழுவை டிராக்டா்கள் உள்ளது. ஒரு நாளைக்கு இவா்களுக்கு 20 லிட்டா் டீசல் தேவைப்படுகிறது. இவா்களுடைய தொழில் மீனவா்களை மட்டுமே சாா்ந்து வாழக் கூடியதாக இருக்கிறது. இவா்களுடைய வாகன அமைப்பு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இழுவை டிராக்டா்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments