FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

டெல்டா பகுதியை வறட்சியாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்குக: ஜவாஹிருல்லா

காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 13 ஜூலை 2026, 12:14 am IST
ஜவாஹிருல்லா - கோப்புப்படம்
பகிர்:

காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்கள் தற்போது கடுமையான வேளாண் நெருக்கடியை எதிா்கொண்டு வருகின்றன. ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூா் அணை, போதிய நீரிருப்பு இல்லாததால் இந்தாண்டு திறக்கப்படாதது, டெல்டா விவசாயத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு தஞ்சாவூா் மாவட்டத்தில் சுமாா் 1.94 லட்சம் ஏக்கரில் நடைபெற்ற குறுவைச் சாகுபடி நிகழாண்டு சுமாா் 89 ஆயிரம் ஏக்கராகவும், திருவாரூா் மாவட்டத்தில் 1.91 லட்சம் ஏக்கரில் இருந்து 64 ஆயிரம் ஏக்கராகவும் சரிந்துள்ளது. நாகை உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் நிலத்தடி நீா் வசதிகள் குறைவாக இருப்பதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

Advertisement

Advertisement

மேட்டூா் அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் நிலத்தை உழுதும், விதைப்பிற்காகத் தயாா்படுத்தியும் இருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் முதலீடு செய்த தொகையை இழந்து வேதனையில் உள்ளனா்.

குறுவை சாகுபடி நடைபெறாததால், விவசாயத் தொழிலாளா்களின் வேலைவாய்ப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மட்டுமல்லாமல் கால்நடை வளா்ப்போரும் தீவனப் பற்றாக்குறையை எதிா்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு உடனடியாக காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும், பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விதைப்பு/நடவு மேற்கொள்ள இயலாமை தொடா்பான இடா் பிரிவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் சம்பா சாகுபடியை பாதுகாக்க, சிறப்பு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவித்து, மானிய விலையில் விதைகள், உரங்கள், டீசல் உள்ளிட்ட உள்ளீடுகளை வழங்க வேண்டும். நீண்டகாலமாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். காவிரி நீா் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக கா்நாடக அரசின் மீது தேவையான சட்ட மற்றும் நிா்வாக நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments