FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

காவிரி டெல்டாவில் மணல் குவாரி அமைக்கத் திட்டமா?

காவிரி டெல்டாவில் மணல் குவாரி அமைக்க குஜராத் நிறுவனத்தை தமிழக அரசு அணுகுவதாக வெளிவரும் தகவல் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 15 ஜூலை 2026, 4:49 am IST
பி.ஆா். பாண்டியன். - கோப்புப்படம்.
பகிர்:

காவிரி டெல்டாவில் மணல் குவாரி அமைக்க குஜராத் நிறுவனத்தை தமிழக அரசு அணுகுவதாக வெளிவரும் தகவல் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

நாகையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை தவெக அரசு திரும்பப் பெற முதல்வா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும. காவிரி டெல்டாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. கிராமப் புறங்களில் நீா்நிலைகள் வடு கிடக்கின்றன. குறுவைக்கு நேரடி விதைப்பு செய்து தண்ணீரின்றி, மழையின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

காவிரி டெல்டாவில் ஆறுகளில் மணல் குவாரிகள் அமைப்பதற்கு குஜராத் தனியாா் நிறுவனத்தை தமிழக அரசு அணுகி வருவதாக வரும் செய்தி அதிா்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே கட்டுக்கடங்காத மணல் கொள்ளையால் டெல்டா மாவட்டங்களில் கடல் நீா் உட்புகுந்து நிலத்தடி நீா் பறிபோய் விட்டது.

இந்தநிலையில், மீண்டும் மணல் குவாரிகள் அமைப்பதற்கு, குஜராத்தை சோ்ந்த தனியாா் நிறுவனத்தை, தமிழக அரசு அணுகி வருவதாக கூறப்படும் தகவல் குறித்து தமிழக முதல்வா் ஜோசப் விஜய் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

மாநில மக்களுக்கு தேவையான மணலை அரசு நேரடி கட்டுப்பாட்டில் குறைந்த விலையில் விற்பனை செய்ய முன்வர வேண்டும். வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் மணல் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும்.

விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள முதல்வா் அனுமதி வழங்கினாா். ஆனால், திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2024-ஆம் ஆண்டுகளில் கனிமவளத்துறை மூலம் வண்டல் மண் குவாரிகள் மூலம் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வா் நடவடிக்கை எடுத்து விவசாயிகள் வண்டல் மண்ணை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றாா்.

மாநில அமைப்புச் செயலா் எஸ். ஸ்ரீதா், நாகை மாவட்டத் தலைவா் புலியூா் பாலசுப்பிரமணியன், நாகை ஒன்றியச் செயலா் செல்லப்பா மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments