முகப்பு
நாகப்பட்டினம்

உமீத் இணையதளத்தில் விடுபட்ட வக்ஃபு சொத்துக்களை பதிவேற்ற வேண்டும்

Updated On : 9 ஜூன் 2026, 3:16 am IST
எம்.எச். ஜவாஹிருல்லா - கோப்புப் படம்
பகிர்:

உமீத் இணையதளத்தில் விடுபட்ட வக்ஃபு வாரிய சொத்துகளை பதிவேற்றம் செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகை எம்எல்ஏவுமான எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை:

உமீத் இணையதளத்தில் நாட்டில் உள்ள அனைத்து வக்ஃபு சொத்துக்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்தச் சட்டத்தின் விதியாகும். இந்த பதிவிற்கான காலக்கெடு 6 மாதங்களுக்கு முன்பே முடிவடைந்தபோது, அன்றைய திமுக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக வக்ஃபு தீா்ப்பாயத்தின் மூலம் 6 மாதகாலம் காலக்கெடு நீடிக்கப்பட்டு, வக்ஃப் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வந்தது.

Advertisement

Advertisement

காலக்கெடு முடிவடைய ஓரிரு நாட்கள் இருக்கும்போது, வக்ஃபு சொத்துக்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என நிராகரிக்கப்பட்டதால், தேவையான ஆவணங்களை கொண்டு மீண்டும் பதிவேற்றம் செய்வதற்கான காலம் முடிவடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான வக்ஃபு சொத்துக்கள் இருக்கும்போது, வெறும் 15,000 சொத்துக்கள் மட்டுமே உமீத் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, 8015 வக்ஃபு சொத்துக்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு ஒரு முழுநேர முதன்மை செயல் அலுவலா் இல்லாததே இதற்கு காரணம்.

எனவே, வக்ஃபு சொத்துக்களை பாதுக்காக்க, உமீத் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீடிக்க, நீதிமன்றம் மூலம் ஆணை பெறவும், உமீத் இணையதளத்தில் இதுவரை பதிவு செய்யாமல் உள்ள வக்ஃபு சொத்துக்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், முக்கியமாக தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துக்கு முழுநேர முதன்மை செயல் அலுவலரை விரைந்து நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.