FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி புறவழிச்சாலைப் பணியால் விளைநிலங்கள், வீடுகள் பாதிப்பு

Updated On : 9 ஜூன் 2026, 3:16 am IST
வேளாங்கண்ணி புறவழிச்சாலை அமைக்கும் பணியை கைவிடக்கோரி, ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை திரண்ட கிராம மக்கள்.
பகிர்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புறவழிச்சாலைப் பணியால் விளைநிலங்கள், வீடுகள் பாதிக்கப்படும், எனவே திட்டத்தை கைவிட வலியுறுத்தி, ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இதனால் வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில் இருந்து பேராலயம் செல்லும் சாலை போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்து விடுகிறது.

இதனால் வேளாங்கண்ணிக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது. கடந்த திமுக ஆட்சியில் வேளாங்கண்ணிக்கு புறவழிச்சாலை அமைக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நில கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்கின.

Advertisement

Advertisement

இந்தநிலையில், வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கைநல்லூா் கிராமத்தில் மா, தென்னை உள்ளிட்டவற்றை அழித்து புறவழிச்சாலை அமைக்க இருப்பதாகவும், இதனால் தோட்டங்கள், விளைநிலங்கள், வீடுகள் பாதிக்கப்படும் என்று கூறி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:

ஏற்கெனவே கிழக்கு கடற்கரைச் சாலையில் இருந்து வேளாங்கண்ணி செல்வதற்கு, சக்தி விநாயகா் கோயில் இணைப்பு சாலையாக இருந்துவரும் நிலையில், அதன் அருகிலேயே புதிய சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

புறவழிச்சாலை அமைந்தால் தெற்குப் பொய்கைநல்லூா் கிராம மக்களுக்கு சொந்தமான மாமரங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள் மற்றும் வீடுகள் மற்றும் கட்டடங்களை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, விளைநிலங்களை அழித்து, வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

சாலை அமைக்கும் பணியை கைவிடக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாங்கொத்துகளை கையில் ஏந்தியபடி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments