பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி சாலை மறியல்
வலங்கைமான் அருகே கருகும் பயிரைக் காப்பாற்ற வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விடக் கோரி,
வலங்கைமான் அருகே கருகும் பயிரைக் காப்பாற்ற வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விடக் கோரி, வலங்கைமான் அருகே விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலங்கைமான் அருகே உள்ள புலவர் நத்தம் பகுதியில் சுமர் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் தற்போது கதிர்வரும் நிலையில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக போதிய மழை இல்லாததாலும், கஜா புயல் பாதிப்பு காரணமாக மும்முனை மின்சாரம் சரிவர கிடைக்காததாலும் பம்பு செட்டுகளில் மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலையுள்ளது. மேலும், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீர், வெண்ணாறு டிவிஷனில் போதிய அளவு திறக்கப்படாததால் புலவர் நத்தம் பகுதியில் உள்ள வயல்கள் தண்ணீரின்றி காய்ந்து, பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தும், வெண்ணாற்றில் போதிய தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதைக் கண்டித்தும், வெண்ணாற்றில் உடனடியாக கூடுதல் தண்ணீர் திறந்து விடக் கோரியும் வலங்கைமான- நீடாமங்கலம் சாலையில் புலவர் நத்தம் பேருந்து நிறுத்தம் அருகில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வலங்கைமான் வட்டாட்சியர் சந்தானகோபாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வெண்ணாற்றில் கூடுதல் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் வலங்கைமான்- நீடாமங்கலம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியது: நீடாமங்கலத்திலிருந்து அம்மாபேட்டை வரை வெண்ணாற்றில் 15 நாள்களுக்கும் மேலாக பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளுபவர்களுக்கு ஆதரவாக, பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடாமல் உள்ளனர் என தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.