காளான் வளர்ப்பில் ஈடுபட்டு பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளலாம்'
வீட்டுப் பெண்கள், வேலையில்லா இளைஞர்கள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரித்து
வீட்டுப் பெண்கள், வேலையில்லா இளைஞர்கள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரித்து தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளலாம் என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஜெ. வனிதாஸ்ரீ, தெ. ரேகா மற்றும் பேராசிரியர் ஆ. பாஸ்கரன் ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காளான் என்பது பூசண வகையைச் சேர்ந்த பச்சையம் இல்லாத தாவரமாகும். பல்வேறு நிறங்களில் காணப்படும். காளானில் அனைத்து காளான்களையும் உணவுக்கு பயன்படுத்த முடியாது. இவற்றில், சாப்பிடக்கூடிய காளான் வகையை அறிந்து அதை வீட்டில் உற்பத்தி செய்து சிறந்த உபத்தொழிலாக மாற்றிக் கொள்ள முடியும். கோடை காலங்களில் வளரும் பால் காளானையும், குளிர் காலங்களில் வளரும் சிப்பி காளானையும் வளர்த்து பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம். இத்தொழில் அனைவரும் ஈடுபடலாம் என்றாலும், வீட்டில் இருக்கும் பெண்கள், வேலையில்லா இளைஞர்கள் காளாண் வளர்ப்பில் ஈடுபட்டு சிறந்த பயனை அடையலாம்.
பால் காளான் தண்டுப் பகுதியும் தலையில் குடை போன்றும் காணப்படும். புரதச்சத்து அதிகம் அடங்கியுள்ளது மட்டுமன்றி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதை சாப்பிடுவதன் மூலம், ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கலாம். காளான் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடிய சக்தி உண்டு. ஆகையால், காளானை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிடும் உணவாகும்.
மனிதர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் உள்ள பொட்டாசியம் அளவு குறையும்போது இதயத்தின் செயல்பாடு மாறி விடுகிறது. இப்பொட்டாசியம் அளவை சரி செய்ய பொட்டாசியம் சத்து நிறைந்த உணவை நாம் உட்கொள்ள வேண்டும். 100 கிராம் காளானில் 447.00 மில்லி கிராம் பொட்டாசியம் சத்து அடங்கியுள்ளது. எனவே இதுஇதயத்தை காக்க சிறந்த உணவாகும். காளானில் அடங்கியுள்ள தாமிரச்சத்து ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர் செய்கிறது. காளான் எளிதில் செரிமானத் தன்மை கொண்டது. இதிலுள்ள, நோய் எதிர்ப்பு சக்தியானது விஷக் காயச்சலையும் விரட்டக் கூடியது.
காளான் சூப் நாள்தோறும் குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும். எனவே, பெண்கள் மற்றும் இளைஞர்கள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கை பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.