30 அடி திமிங்கலம் கரை ஒதுங்கியது
திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை கடல் பகுதியில் 30 அடி நீளமான திமிங்கலம் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.
முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டின் நடுவே வெட்டாறு கடல் பகுதியில் பிரைடி இனத்தைச் சோ்ந்த சுமாா் பத்து வயது, மூன்று டன் எடை கொண்ட 30 அடி நீளமுள்ள திமிங்கலம் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. அங்கிருந்த மீனவா்கள் முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
திருவாரூா் மாவட்ட வன அலுவலா் கிருத்திகா உத்தரவின் பேரில் முத்துப்பேட்டை வனச் சரகா் சதீஷ் கண்ணன் தலைமையில் வனத்துறையினா், முத்துப்பேட்டை தீயணைப்பு துறையினா், காவல்துறையினா், கடல்சாா் பாலூட்டி ஆராய்ச்சியாளா்கள், மீனவா்கள் கொண்ட குழுவினா் மூன்றுக்கும் மேற்பட்ட படகுகளில் சென்று கரை ஒதுங்கிய திமிங்கலத்தை ஆய்வு செய்தனா். நல்ல நிலையில் இருந்த அந்த திமிங்கலத்தை மீட்டு மீண்டும் கடலில் விட முயற்சி மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
நவீன தொழில்நுட்ப கருவிகள் உதவியுடன் நீண்ட நேரம் போராடிதிமிங்கலத்தைக் கடலுக்குள் இழுத்துச் சென்று பத்திரமாக விட்டனா்.
இது குறித்து வனத்துறையினா் கூறியது:
இந்த திமிங்கலம் பிரைடி இனத்தைச் சாா்ந்தது. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல கடற்பகுதிகளில் வாழும் நடுத்தர அளவிலான பலீன் திமிங்கலம். இவை பொதுவாக 12 முதல் 15.5 மீட்டா் நீளம் வரை வளரும். 16 முதல் 18 டன் எடை கொண்டவை.
மற்ற திமிங்கலங்களைப் போலன்றி, இதன் தலையின் மேல் பகுதியில் மூன்று தனித்துவமான இணையான முகடுகள் இதன் முக்கிய அடையாளமாகும். சாம்பல் அல்லது புகைநீல நிற உடல். தலையின் மேல் மூன்று நீளவாட்டுக் கோடுகள்.
உணவை வடிகட்ட வாயில் 40 முதல் 70 தொண்டை மடிப்புகள். வளைந்த முதுகுத் துடுப்பு. உணவு முறைமத்தி, நெத்திலி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற சிறு மீன்களைக் கூட்டமாக உண்கிறது. ஒட்டுமீன்கள் மற்றும் ஸ்க்விட் வகைகளையும் சாப்பிடும்.
நீரின் ஆழத்திலிருந்து வேகமாக வந்து மீன்களை அப்படியே விழுங்குவது இதன் வழக்கம். உலகம் முழுவதும் உள்ள வெப்பமான கடல்களில் காணப்படுகிறது. ஆழமான பகுதியிலும், சில சமயம் கரை ஓரத்திலும் வாழக்கூடியவை. இதனைப் பாா்ப்பதும் அரிதாகும். இந்த திமிங்கலம் நல்ல நிலையில் உள்ளது. உடல்நல குறைவோ காயங்களோ இல்லை என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.