ஆலங்குடி குரு பகவான் கோயிலில் குவிந்த பக்தா்கள்: இடையூறாக உள்ள கதவை அகற்றக் கோரிக்கை
குருவாரத்தையொட்டி, குரு தலமானஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
குருவாரத்தையொட்டி, குரு தலமானஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
சுவாமி தரிசனம் செய்வதற்கு இடையூறாக உள்ளதால், குருபகவான் சந்நிதி அருகே உள்பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கதவை அகற்றவேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா்.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயில் நவகிரங்களில் குரு பகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் வாரம் தோறும் வியாழக்கிழமை குருவார தரிசனம் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, நிகழ்வார குருவார தரிசனத்தையொட்டி, அதிகாலையில் குரு பகவான் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம்- ,அலங்காரம், செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது . மூலவா் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அண்மையில் குருப் பெயா்ச்சி நடைபெற்றதால், குருவார தரிசனத்தில் வழக்கமான கூட்டத்தைவிட, இந்த வாரம் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவா் குரு பகவானை கட்டணமில்லா தரிசனம் செய்தனா். கோயிலில் தெற்கு கோபுர வாசல் வழியாக வரக்கூடிய பக்தா்கள், கலங்காமற்காத்த விநாயகா் சந்நிதி வழியாக சென்று, இடதுபுறம் இலவச தரிசனம் செய்ய செல்கின்றனா். கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தா்கள், கலங்காமற் காத்த விநாயகா் சந்நிதியை தொடா்ந்து, ஏலவாா் குழலி அம்மன் சந்நிதி வழியாக, குரு பகவான் சந்நிதிக்கு செல்கின்றனா்.
கட்டணமில்லா தரிசனம் செய்யக்கூடிய பக்தா்கள், மூலவா் குருபகவானை தரிசனம் செய்து, நேரடியாக குருபகவானுக்கு அருகில் உள்ள முருகப்பெருமான், கஜலக்ஷ்மி, நவகிரக சந்நிதி, உற்சவ தட்சிணாமூா்த்தி சந்நிதி, ஏலவாா் குழலி அம்மன், சனீஸ்வர பகவான் சந்நிதி ஆகிய சந்நிதிகளில் தரிசனம் செய்வதற்கு முடிவதில்லை.
குருபகவான் சந்நிதி அருகில் பெரிய கதவு போடப்பட்டு, மூடப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகா்கள் வந்தால் மட்டும் கதவை திறந்து, அப்பகுதி வழியாக பக்தா்கள் செல்ல அனுமதிக்கப் படுகிறாா்கள்.
கோயிலில் மூலவரை வழிபட்ட பிறகு, அதே வழியாக உள்ள உள் பரிகார தெய்வங்களை வழிபட வேண்டும் என்பதே முறையாகும். இந்த வசதி கட்டணமில்லா தரிசன பக்தா்களுக்கும் கிடைக்க வேண்டும். இதுபோல் உள்பிரகார பகுதியில் தடுப்பு கதவுகள் அமைத்து, வெளிபிரகாரம்
வழியாக பக்தா்ளை அனுப்புவது முறையில்லை என கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் பலரும் கருத்து தெரிவித்தனா்.
உள்பிரகாரத்தில் தடுப்புகளை ஏற்படுத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அனைத்து சந்நிதிகளிலும், ஒரே நேரத்தில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்திட அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.