தமிழக மக்கள் மீது மோடி அரசுக்கு அக்கறை இல்லை
கஜா புயல் விஷயத்தில் தமிழக மக்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு
கஜா புயல் விஷயத்தில் தமிழக மக்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அக்கறையில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மு. கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்ததை வரவேற்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏராளாமான வாக்குறுதிகளை அளித்து மக்களவை ஏமாற்றிவிட்டது. இதுதான் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி தோல்விடைந்ததற்குக் காரணம். குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவு மாநிலங்கள் என்றழைக்கப்பட்ட மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றில் மக்கள் பாஜக ஆட்சியை அகற்றி, காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். இதை 2019 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்க வேண்டும். இது காங்கிரஸ் கட்சியின் வெற்றியின் தொடக்கம்; மோடிக்கு வீழ்ச்சியின் தொடக்கமாகும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு போதுமான உதவிகளைச் செய்யவில்லை. ஏறத்தாழ ரூ. 50 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ரூ. 15 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரியுள்ளது.
இதுவரை ரூ. 350 கோடியை மட்டுமே மத்திய அரசு அளித்திருப்பது "யானைப் பசிக்கு சோளப் பொரி' போல உள்ளது. கஜா புயல் பாதித்த பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும்.
பல்வேறு விஷயங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு அக்கறை இல்லை. மேலும், மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு அ.தி.மு.க. அரசும் அழுத்தம் கொடுப்பதில்லை. இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள அதிமுக எம்பிக்கள் 50 பேரும் நெருக்கடி அளித்து தேவையான நிதியைப் பெற வேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.