தில்லியில் 6-ஆவது நாளாக நீடித்த மழை
தில்லியில் 6-ஆவது நாளாக வியாழக்கிழமை மாலை சுமார் 2 மணி நேரம் விடாமல் பலத்த மழை கொட்டியது. இதனால், நகரின் முக்கியச்சாலைச் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தில்லியில் 6-ஆவது நாளாக வியாழக்கிழமை மாலை சுமார் 2 மணி நேரம் விடாமல் பலத்த மழை கொட்டியது. இதனால், நகரின் முக்கியச்சாலைச் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தில்லியில் தற்போதைய மழைக்கால சீசனில் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் தில்லியிலும், தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், தில்லியில் சீதோஷ்ண நிலையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டது. நகரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
இந்நிலையில், ஆறாவது நாளாக வியாழக்கிழமை மாலை சுமார் 5 மணிக்கு தில்லியிலும், தேசியத் தலைநகர் வலயப் பகுதியிலும் பலத்த மழை கொட்டியது.
குறிப்பாக தில்லி ஐ.டி.ஓ., மண்டி ஹவுஸ், லக்ஷ்மி நகர், மதர் டைரி, கிரேட்டர் நொய்டா, அக்ஷர்தாம், மயூர் விஹார், ஓக்லா, நியூ பிரண்ட்ஸ் காலனி, ஆஸ்ரம், லாஜ்பத் நகர், ஹோஸ் காஸ், கிரேட்டர் கைலாஷ், சப்தர்ஜங், புது தில்லி ரயில்வே ஸ்டேஷன், கனாட் பிளேஸ், சாகேத் உள்ளிட்ட பல இடங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை தொடர்ந்து 2 மணி நேரம் வரை நீடித்தது. இதனால், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவோருக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. ஆங்காங்கே வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.