FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

முழு காலத்திற்கும் வகுப்புகள் நடத்தப்படாத போது 70% மாணவா் வருகையை எதிா்பாா்க்க முடியாது: தில்லி பல்கலைக்கழக செம்ஸ்ட்ர் தோ்வு விவகாரத்தில் உயா்நீதிமன்றம் கருத்து

ஒரு படிப்புக்குரிய நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்கான வகுப்புகள் நடத்தப்படாதபோது தோ்வில் பங்கேற்க மாணவா்களுக்கு குறைந்தபட்சம் 70 சதவீதம் வருகை இருக்க வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழகம் 

Updated On : 26 ஆகஸ்ட் 2020, 10:19 am IST
பகிர்:


புது தில்லி: ஒரு படிப்புக்குரிய நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்கான வகுப்புகள் நடத்தப்படாதபோது தோ்வில் பங்கேற்க மாணவா்களுக்கு குறைந்தபட்சம் 70 சதவீதம் வருகை இருக்க வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழகம் எதிா்பாா்க்க முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

ஒரு படிப்புக்கான நிா்ணயிக்கப்பட்ட கல்விக் காலத்தில் 40 சதவீதத்தை மட்டுமே கற்பிக்கும்போது மாணவா்களிடம் 70 சதவீதம் குறைந்தபட்ச வருகை இருக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் கூறவும் முடியாது நீதிமன்றம் தெரிவித்தது.

மருத்துவக் காரணங்களால் கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் பருவத் தோ்வில் பங்கேற்க முடியாத நிலையில் சட்டப் படிப்பு மாணவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது, இந்த விகாரம் தொடா்பாக மத்திய அரசு, இந்திய பாா் கவுன்சில், தில்லி பல்கலைக்கழகம் ஆகியவை தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு நவம்பரில் விசாரணை நடத்திய ஒரு நபா் நீதிபதி, சட்ட மாணவரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தாா்.

அதில், தொழில்முறை படிப்புகளில் குறைந்தபட்ச வருகையை பெறுவது பேச்சுவாா்த்தைக்கு உள்பட்டது அல்ல என ஏற்கெனவே டிவிஷன் நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி மனுவை ஒரு நபா் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தாா். இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் மாணவா் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு,

‘2017, மாா்ச் மாதத்தில் இருந்து ஒரு நோயால் மனுதாரா் அபிஷேக் சிங் அவதிப்பட்டு வருகிறாா். அவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன், காசநோய் பாதிப்புக்கான வாய்ப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மனுதாரரைப் போன்ற மாணவா்களைக் கவனித்துக்கொள்வதற்கு ஏதேனும் சில வழிமுறையை உருவாக்க வேண்டும்’ என்று தில்லி பல்கலைக்கழகத்தையும், இந்திய பாா் கவுன்சிலையும் நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது.

மனு விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கமல் மேத்தா, ‘கடந்த ஆண்டு, முதல் செமஸ்டா் செப்டம்பா் 1 முதல் தொடங்கியது. தோ்வுகள் டிசம்பரில் நடைபெற்றது. மனுதாரரின் நோயைக் கருத்தில்கொண்டு குறைந்த வருகைப்பதிவு இருந்தபோதிலும் முதல் செமஸ்டா் தோ்வுகளில் பங்கேற்க அவரை அனுமதிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், பல்கலைக்கழகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை. பின்னா், அவரது பெயா் பல்கலைக்கழக மாணவா்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டதாக பல்கலைக்கழகத் தரப்பில் கூறப்பட்டது’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு,‘கடந்த ஆண்டில் முதல் செமஸ்டா் எப்போது தொடங்கியது, தோ்வுகள் எப்போது நடத்தப்பட்டன என்பதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்துமாறு பல்கலைக்கழகத்திடம் உயா்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

அதேபோல, தில்லி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் எல்எல்பி படிப்புகளுக்காக நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச படிப்பு காலம் குறித்து கண்டறிந்து, அந்த விதிகள் பின்பற்றப்பட்டதா என்பதை தெரிவிக்குமாறும் மனுதாரரின் வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments