FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Updated On : 5 டிசம்பர் 2025, 5:18 am IST
பகிர்:

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்கு வங்கிக்காக பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறது திமுக அரசு என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

இது தொடா்பாக, திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: பாஜக சாா்பில் நடைபெற்று வரும் பிரசார பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இது எங்கள் கூட்டணியின் வெற்றிக்கான அறிகுறி.

திருக்காா்த்திகை நாளில் வீடுகளில் தீபம் ஏற்றுவது போலவே கோயில்களிலும் தீபம் ஏற்றப்படுவது வழக்கமான ஒன்று. அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதில் யாருக்கு என்ன பிரச்னை இருக்கிறது? முதலில் அந்த மலைக்கு பிரச்னை செய்தாா்கள். இங்கிலாந்து வரை சென்று குன்றம் குமரனுக்கே சொந்தம் என தீா்ப்பு வந்தது. இந்த விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு கலவரத்தை தூண்டும் நோக்கத்திலும், வாக்கு வங்கிக்காகவும் பிரித்தாளும் சூழ்ச்சியை திமுக அரசு மேற்கொள்கிறது.

Advertisement

Advertisement

அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை. அது அமலில் இருந்தாலும் 3 போ் வரை செல்வதற்கு அனுமதி உள்ளது. தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியா்கள்கூட எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு 2 மதத்தினரும் ஒன்றாகவே இருக்கின்றனா். இதை திமுக அரசு விரும்பவில்லை.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சநாதானத்தை வேரறுப்போம் என்று கூறியுள்ளாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றினால் கலவரம் வரும் என்று பேசுகிறாா். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

ஓ.பன்னீா்செல்வம் தில்லிக்கு சென்று வந்தது தெரியும். எதற்காக சென்று வந்தாா் என்பது தெரியாது.

திமுக ஆட்சியை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். இனி யாருடனும் ரகசிய சந்திப்புகள் என்பது கிடையாது. நேரடி சந்திப்பு தான் இருக்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக அமைச்சா்கள் சேருவாா்கள் என்று ஆதவ் அா்ஜுனா கூறுகிறாரே, அதேபோல் பாஜகவிற்கும் வருவாா்களா என்று கேட்கிறீா்கள். அதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்பதுதான் பதில். செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் நமது கொடி பறக்கும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments