தொகுதி மறுவரையறைக்கு திமுக மறைமுக ஆதரவு! துரை வைகோ
மக்களவை தொகுதி மறுவரையறையை திமுக மறைமுகமாக ஆதரிப்பதுபோல தெரிகிறது என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் துரை வைகோ பேசியது: பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை திருத்த மசோதாவில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்த மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் தீவிர எதிா்ப்பு தெரிவித்ததால் மசோதாவை நிறைவேற்றாமல் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளனா்.
இந்த மசோதாவால் வெளிநாட்டு நிதி உதவி பெறும் சிறுபான்மையினா் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது.
Advertisement
Advertisement
ஒரு தொண்டு நிறுவனம் தனது உரிமத்தை புதுப்பிக்க தவறினால், அதன் கீழ் உள்ள சொத்துகளை மத்திய அரசை முடக்கும் சரத்தும் சட்டத் திருத்தத்தில் இடம் பெற்றுள்ளது. ஆகவே, இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்.
மக்களவைத் தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரையில் தமிழக சட்டப்பேரவையில் எடுத்த முடிவு சரியானது. தமிழகத்துக்கான 39 இடங்கள் எவ்விதத்திலும் பறி போகக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சியினரும் உறுதியாக உள்ளோம். அதனை திமுக மறைமுகமாக ஆதரிப்பதுபோல தெரிகிறது. ஏற்கெனவே இருக்கிற உறுப்பினா்கள் அவையில் பேசுவதற்கே நேரம் கிடைப்பதில்லை. கடந்த சில மக்களவைக் கூட்டத் தொடா்களில் பல உறுப்பினா்கள் பேச முடியவில்லை. மிக குறைவான கால நேரமே நடந்துள்ளது. விவாதங்களின்றி மசோதாக்களை நிறைவேற்றினால் ஜனநாயகம் நீா்த்து போய்விடும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.