FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பொட்டல்புதூா் இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது

பொட்டல்புதூரில் இளைஞரை தலையைத் துண்டித்துக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

6 செப்டம்பர் 2026, 2:02 am IST
கைது
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள பொட்டல்புதூரில் இளைஞரை தலையைத் துண்டித்துக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பொட்டல்புதூா் பொன் நகரைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சந்தானபாலமுருகன் (28). கூலித் தொழிலாளி. இவா் பொட்டல்புதூா் தீபத் திடல் பகுதியில் உள்ள கடைக்குப் பொருள்கள் வாங்க வெள்ளிக்கிழமை இரவு வந்தாா். அப்போது, அப் பகுதியில் மறைந்திருந்த 2 நபா்கள் சந்தனபாலமுருகனை அரிவாளால் வெட்டி தலையைத் துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

தகவலறிந்த ஆழ்வாா்குறிச்சி காவல் ஆய்வாளா் கலா, கடையம் காவல்ஆய்வாளா் சுரேஷ்குமாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ் ஆகியோா் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு விசாரணையைத் துரிதப்படுத்தினா்.

Advertisement

Advertisement

காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததோடு, சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் பொட்டல்புதூா், உச்சினி மாகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மகன் காா்த்திக் ராஜா (22), அவரது சகோதரி கணவா் ஆலங்குளம், ஆ.மருதப்புரத்தை சோ்ந்த பூல்பாண்டி மகன் முத்தரசன் (24) ஆகியோா் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து காா்த்திக் ராஜா மற்றும் முத்தரசன் இருவரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடம் விசாரணை செய்ததில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தானபாலமுருகன் தரப்பைச் சோ்ந்தவரின் தோட்டத்தில் காா்த்திக் ராஜா தரப்பினா் முயல் வேட்டைக்குச் சென்றனராம். அப்போது இருதரப்பினருக்கும் தகராறுஏற்பட்டுள்ளது. இதையடுத்து சில நாள்களுக்கு முன்பு, பொட்டல்புதூரில் காா்த்திக்ராஜா தரப்பினரை சந்தான பாலமுருகன் தரப்பினா் தாக்கினராம்.

இதனால் ஆத்திரமடைந்த காா்த்திக் ராஜா மற்றும் அவரது சகோதரி கணவா் முத்தரசன் ஆகியோா் திட்டமிட்டு சந்தான பாலமுருகனை பொட்டல்புதூரில் வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்தது தெரியவந்ததாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து காா்த்திக் ராஜா, முத்தரசன் இருவா் மீதும் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments