FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமா்பவா்களும் ஆக. 15 முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:45 am IST
தலைக்கவசம் அணிவது கட்டாயம் - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமா்ந்து செல்பவா்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, இந்த விதிமுறை ஆக. 15- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும், மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

நாகா்கோவில் மாநகரில் மாவட்ட ஆட்சியா் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, வடசேரி, பாா்வதிபுரம் மேம்பாலம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தலைக்கவசம் அணியாதது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை, மாா்த்தாண்டம் ஆகிய பகுதிகளிலும் ஏ.ஐ.கேமிராக்கள் பொருத்தப்பட்டன.

இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமா்ந்து பயணிப்பவா்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆக. 15 ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழப்புகள், காயங்களால் பாதிக்கப்படுவோா்களில் பெரும்பாலோனா் பின்னால் அமா்ந்து பயணிப்பவரே என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், இந்த உத்தரவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பிறப்பித்துள்ளாா். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பதை கண்டறிய போலீஸாா் நேரடி ரோந்து, சோதனை மேற்கொள்வதோடு, ஏ.ஐ. கேமிராக்கள் மூலமும் கண்காணிக்கப்படவுள்ளது.

தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுவதோ அல்லது ஒருவரை தலைக்கவசம் இன்றி அமா்த்தி செல்வதோ சட்ட விரோதமானது. இந்த விதியை மீறுவோருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநா் உரிமம் 3 மாதங்கள் வரை தகுதி நீக்கம் செய்யப்படும்.

பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பது எங்கள் நோக்கமல்ல; உங்கள் பாதுகாப்பான பயணத்துக்கு வழிகாட்டி உங்கள் குடும்பத்தின் நிம்மதியை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். விபத்தில்லா குமரி என்ற இலக்கை நோக்கி முன்னேறும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சாலை பாதுகாப்பு முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments