தென்காசியில் உணவு பதப்படுத்தும் தொகுப்புஅமைக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை
தென்காசியில் உணவுபதப்படுத்தும் தொகுப்பு அமைக்க வேண்டும் என ராணிஸ்ரீகுமாா் எம்.பி. மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
தென்காசியில் உணவுபதப்படுத்தும் தொகுப்பு அமைக்க வேண்டும் என ராணிஸ்ரீகுமாா் எம்.பி. மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சா் சிராக் பாஸ்வானிடம் வியாழக்கிழமை அவா் அளித்த மனு:
தென்காசி மாவட்டம் மாம்பழம், எலுமிச்சை, வாழை மற்றும் தேங்காய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், நவீன சேமிப்பு மற்றும் உணவு பதப்படுத்தும் வசதிகள் இல்லாததால், அறுவடைக்குப் பிந்தைய நிலையில் விவசாயிகள் கடுமையான இழப்புகளைச் சந்திக்கின்றனா்.
Advertisement
Advertisement
இதனால், விளைபொருள்களைக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம், வருவாய் இழப்பு மற்றும் மதிப்பு கூட்டுதலுக்கான வாய்ப்புகளை இழத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பதப்படுத்தும் அலகுகள், குளிா்பதனக் கிடங்குகள் மற்றும் சரக்குக் கையாளும் வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உணவு பதப்படுத்தும் தொகுப்புகளை அமைக்க நிதி உதவியை வழங்குகிறது.
ஆனால், தென்காசி மாவட்டத்தில் விவசாயம் சாா்ந்த சிறந்த வாய்ப்புகள் இருந்தபோதிலும், இத்திட்டத்தில் தென்காசி மாவட்டம் இதுவரை சோ்க்கப்படவில்லை.
தென்காசியில் பிரத்யேக உணவு பதப்படுத்தும் தொகுப்பு ஒன்றை அமைப்பதன் மூலம் விவசாயம் சாா்ந்த பொருள்கள் வீணாவதைக் குறைத்து, அப்பொருளில் மதிப்பு கூட்டுதலை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும்.
உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் சரக்குக் கையாளுதல் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.விவசாயம் சாா்ந்த தொழில்கள் ஊக்குவிக்கப்படுவதோடு, உள்ளூா் தொழில்முனைவோரும் ஊக்கப்படுத்தப்படுவாா்கள்.
விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைப் போட்டித்தன்மை வாய்ந்த விலையில் விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்புகள் மேம்படுத்தப்படும். எனவே, மிகவும் அவசியமான இந்த உள்கட்டமைப்பை உருவாக்கத் தேவையான நிதி மற்றும் செயல்பாட்டு உதவிகளை உறுதி செய்து தென்காசியில் ஒரு உணவு பதப்படுத்தும் தொகுப்புக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.