வட்டாட்சியர் அலுவலக பிரச்னை: கடையநல்லூரில் இன்று சர்வகட்சி ஆர்ப்பாட்டம்
கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தை நகரப் பகுதிக்குள் அமைக்க வலியுறுத்தி,
கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தை நகரப் பகுதிக்குள் அமைக்க வலியுறுத்தி, வியாழக்கிழமை (டிச. 20) சர்வகட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சட்டப்பேரவை உறுப்பினர் முகமது அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக முகமது அபூபக்கர் குரல் எழுப்பியதை அடுத்து, அலுவலகக் கட்டடம் நகரப் பகுதிக்குள் அமைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் உறுதி அளித்திருந்தார். இதற்கிடையே ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பறம்பு பகுதியில் புதிய கட்டடம் கட்ட அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி அண்மையில் அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து சர்வகட்சி சார்பில் வியாழக்கிழமை (டிச. 20) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சனிக்கிழமை (டிச. 22) எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும், கடையடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (டிச. 24) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் , அதைத் தொடர்ந்து சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற உள்ளதாக அந்த அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நகரப் பகுதியில் அமைய வேண்டும் என வலியுறுத்தி முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பும் போராட்டம் சமூக நல அமைப்புகள் மூலம் நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.