நதிகளைப் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்: ஆர். நல்லகண்ணு
நதிகளைப் பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான ஆர். நல்லகண்ணு வலியுறுத்தினார்.
நதிகளைப் பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான ஆர். நல்லகண்ணு வலியுறுத்தினார்.
குற்றாலத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் மாநிலத் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான இரா. நல்லகண்ணு தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன், வாழ்வுரிமை இயக்க மாநில பொதுச் செயலர் மு. வீரபாண்டியன், பொ. லிங்கம், வழக்குரைஞர் குமார், மாநிலச் செயலர் சிவா, அஷ்ரப்அலி, பழனிக்குமார், கணேசன், முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
வன்கொடுமைத் தடை சட்டத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கையை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். மத்திய - மாநில அரசுகளை விமர்சிக்கும் செயல்பாட்டாளர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும்; கைதுசெய்யப்பட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
பாஜகவை விமர்சித்து கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா மீதான வழக்கை உடனே வாபஸ் பெற வேண்டும். ஆகம விதிப்படி அர்ச்சகர்களாகப் பயிற்சி பெற்ற 206 தீட்சிதர்களை கோயில்களில் பணி நியமிக்க வேண்டும் என, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, செய்தியாளர்களிடம் ஆர். நல்லகண்ணு கூறியது: தாமிரவருணியில் மகாபுஷ்கரம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். விழாவுக்கு மதவாதிகள், ஆன்மிகவாதிகள் வருவதாகத் தெரிவித்துள்ளனர். மகாபுஷ்கர விழா 142ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாகத் தெரியவில்லை. தாமிரவருணி நதிக்கென தனித்தன்மை உள்ளது. அதனால், மத விழாவாகவும், ஐதீக விழாவாகவும் நடத்துவது பொருத்தமாக இல்லை.
விதிமுறைகளை மீறி மணல் கொள்ளையடிக்கப்பட்டு, பல நதிகள் அழிக்கப்பட்டுவிட்டன.
தனியார் நிறுவனங்களுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் குடிக்கவும், விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
விழா கொண்டாடுவதோடு நின்றுவிடாமல், விவசாயம், குடிநீருக்கு தண்ணீர் கிடைக்கவும், தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தவும், நதிகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.