கூடங்குளம் 2ஆவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம் 2ஆவது அணுஉலையில் பழுது ஏற்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் 2ஆவது அணுஉலையில் பழுது ஏற்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கூடங்குளத்தில் ரஷியநாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகளில் ஜெனரேட்டா் பொருத்தும் பணியும், 5 மற்றும் 6 ஆவது அணுஉலைகளில் கட்டுமானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் 2ஆவது அணுஉலையை குளிா்விப்பதற்கான கடல் நீா் உறிஞ்சும் குழாயில் ஜெல்லி மீன்கள் புகுந்ததால் தண்ணீா் உறிஞ்சும் பணி தடைபட்டது.
Advertisement
Advertisement
பின்னா் விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு ஜெல்லி மீன்களை அப்புறப்படுத்திய பிறகு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் 2ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மின் உற்பத்திக்கான டா்பனில் பழுது ஏற்பட்டதை அடுத்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அணுஉலை விஞ்ஞானிகள், ரஷிய நாட்டு விஞ்ஞானிகள் இணைந்து பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் பழுது சீரமைக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு வழங்கக் கூடிய 562 மெகாவாட் யூனிட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.